தில்லி யமுனை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சத் பூஜைக்கான படித்துறைகளை (காட்) தில்லி வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் ராய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
சத் பூஜை: பூர்வாஞ்சல் மக்களால் ஆண்டுதோறும் சத் பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நீர்நிலைகளான நதிக்கரை, குளம், ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சத் பூஜைக்கான படித்துறைகள் அமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. நிகழாண்டு சத் பூஜை அக். 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சத் பூஜைக்கான ஏற்பாடுகளை தில்லி அரசு செய்து வருகிறது.
சத் பூஜைக்காக காட்-களை அமைக்கவும், தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள தில்லி அமைச்சர் கோபால் ராய் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சீவ் ஜா, தீர்த்த யாத்ரா விகாஸ் சமிதி தலைவர் கமல் பன்சல் உள்ளிட்டோரும், தில்லி அரசின் நீர்ப்பாசன, வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறை உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
ஆய்வு: இந்நிலையில், யமுனை நதிக்கரையில் தயார் செய்யப்படும் "சத் காட்'களை தில்லி வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் ராய் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
சத் பூஜைக்காக முதன் முறையாக நிகழாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, அரசின் சார்பில் 564 பகுதிகளில் சத் காட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 268 பகுதிகளில் காட்கள் அமைக்கப்பட்டு சத் பூஜை நடைபெற்றது.
சத் பூஜைக்காக அமைக்கப்பட்டு வரும் கூடாரம், மருத்துவ வசதி, கழிப்பறை, ஒளி விளக்குகள், சிசிடிவி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்' என்றார்.
இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சீவ் ஜா, தீர்த்த யாத்ரா விகாஸ் சமிதி தலைவர் கமல் பன்சல் உள்ளிட்டோரும், தில்லி அரசின் நீர்ப் பாசன, வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறை உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.