களஆய்வை நடத்தாமல் 2.93 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய தில்லி உணவுத் துறை ஆணையர் மோகன்ஜீத் சிங் முடிவு செய்துள்ளதாக தில்லி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம், தில்லி அரசு அதிகாரிகளுக்கும் தில்லி ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே புதிய மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் அடையாள அட்டை அமலுக்கு வந்த பிறகு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தில்லியில் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் விவகாரத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே முதலில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தில்லியில் சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைகளை கள ஆய்வு செய்யாமலே ரத்து செய்துள்ளதாக உணவுத் துறை ஆணையர் மீது உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் இம்ரான் உசேன் கடந்த மே மாதம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், தொடர்ந்து மூன்று மாதம் ரேஷன் பொருள்களைப் பெறாதவர்களின் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ஆணையருக்கு இம்ரான் உசேன் எழுதியிருந்த கடிதத்தில், "ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ரேஷன் பொருள்களைப் பெறாதவர்களுக்கும் தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கள ஆய்வு நடத்தாமல் 2.93 லட்சம் ரேஷன் அட்டைகளை ரத்த செய்ய உணவுத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளதாக தற்போது மீண்டும் இம்ரான் உசேன் குற்றம்சாட்டியுள்ளார்.
"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்': தில்லி அரசின் எதிர்ப்பையும் மீறி, 2.93 லட்சம் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய உணவுத் துறை ஆணையர் முடிவு செய்துள்ள மோகன்ஜீத் சிங் மற்றும் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லிஅரசு எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தில்லி அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசிடம் தங்கள் பணிகள் குறித்து விவரிக்காமல் இந்த அதிகாரிகள் செயல்படுகின்றனர். மக்களின் நலனுக்கு எதிராக நடைபெறும் இச்செயல் தீவிரமான பிரச்னையாகும். 2.93 லட்சம் ரேஷன் அட்டைகள் (10 லட்சம் பயனாளிகள்) ரத்து செய்யப்படுவதனால் ஏற்படும் சமூக பாதிப்புகளை கணக்கிடுவதில்அந்த அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர். மனிதத்தன்மை அற்ற இந்த செயலால் ஏராளமான குடும்பங்கள் ஒரே நாளில் பட்டினியில் சிக்கி தவிக்க உள்ளன. அலுவலங்களில் அமர்ந்து கொண்டே, வீடுகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் செயல்பாடு சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆகையால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையர் மறுப்பு
தில்லி அரசின் குற்றச்சாட்டை மறுத்துள்ள உணவுத் துறை ஆணையர் மோகன்ஜீத் சிங், "சட்டப்படியே 2.48 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
எனது துறை எடுத்த இந்த சிறப்பு நடவடிக்கையால் பொது விநியோகத்தில் தூய்மை ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வீணடிப்பு தடுக்கப்பட்டுள்ளது. "இ-பிஓஎஸ்' முறையில் ரேஷன் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை தில்லி அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை
36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


