கடந்த 2002-ஆம் ஆண்டில் வெறும் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் சேவையைத் தொடங்கிய தில்லி மெட்ரோ, தற்போது 317 கி. மீட்டர் தூரத்திற்கு தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளுக்கும் ரயில் சேவையை அளித்து வருகிறது என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) மேலாண் இயக்குநர் மங்கு சிங் பெருமையுடன் குறிப்பிட்டார்.
தில்லி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதன் 16-ஆம் ஆண்டு விழா தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மூன்று கட்டங்களாக நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையப் பணிகள், அதன் சிறப்பு அம்சங்கள், மெட்ரோ ரயிலில் பயணித்த பிரபலங்கள், ரயில் சேவையைத் தொடங்கி வைத்த முக்கியத் தலைவர்கள், மெட்ரோ ரயில்வே மூலம் அளிக்கப்படும் சேவைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி கனாட் பிளேஸில் உள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கண்காட்சியை தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தின் மேலாண் இயக்குநர் மங்கு சிங் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் டிஎம்ஆர்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிர்வாக இயக்குநர் அனுஜ் தயாள் மற்றும் இயக்குநர்கள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, தில்லி மெட்ரோவின் வளர்ச்சி தொடர்பாக மங்கு சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி மெட்ரோவில் இதுவரை மூன்று கட்டங்களாக ரயில்வே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பணிகளின் அனுபவத்தைக் கொண்டு மூன்றாவது கட்டப் பணிகள் மிகச் சிறப்பான தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக வழித்தடங்களின் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-இல் 8 கிலோ மீட்டருடன் தொடங்கப்பட்ட தில்லி மெட்ரோ ரயில்வே திங்கள்கிழமை நிலவரப்படி 317 கிலோ மீட்டர் தூரமாக உள்ளது. அடுத்த ஒன்றரை மாதங்களில் இந்த தூரம் 380 கிலோ மீட்டராக அதிகரிக்கும். மேலும், செயல்பாட்டிலும், எரிசக்தி சேமிப்பிலும் பல படிநிலைகள் முன்னேற்றம் காணப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களை விட மூன்றாவது கட்டத்தில் ரயில் நிலையங்களில் எரிசக்தி சேமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த 16 ஆண்டுகள் ரயில் சேவையில் எவ்விதப் பாதுகாப்பு மீறலும் நிகழவில்லை. பயணிகள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு விஷயத்தில் தில்லி மெட்ரோ எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது.
இதில் 100 சதவீதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. தலைநகர் மெட்ரோவில் விரிவாக்கம் நிகழ்ந்து வருகிறது. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தில்லி தவிர, ஜெய்ப்பூர், கொச்சி, மும்பை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளோம். தில்லி மெட்ரோவின் அனுபவம் நாட்டின் இதரப் பகுதிகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தில்லி மெட்ரோவில் ரயில்கள் அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வரை இயக்கப்படுகிறது. அனைத்து பொருள்களின் விலையும் உயர்கிறது.
அதேபோன்று, மெட்ரோ ரயில் கட்டணங்களும் உயர்கின்றன. கட்டணத்தை உயர்த்துவது டிஎம்ஆர்சியின் வசம் இல்லை. அதெற்கென்று தனி அமைப்பு உள்ளது என்றார் அவர்.
டிஎம்ஆர்சி கார்ப்பரேட் கம்யூனிகேஷன் நிர்வாக இயக்குநர் அனூஜ் தயாள் கூறுகையில், "தில்லி மூன்றாவது கட்ட மெட்ரோ திட்டத்தில் தற்போதுவரை 127 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனையாகும்.
இன்னும் சில மாதங்களில் தில்லி, என்சிஆரில் தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பானது 390 கிலோ மீட்டராக இருக்கும். தினமும் தில்லி மெட்ரோ ரயில்கள் 1.20 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கின்றன. 20.80 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
அதிகபட்சமாக ஒரே நாளில் தில்லி மெட்ரோவில் 30.40 லட்சம் பேர் பயணித்துள்ளனர். தினமும் 7 லட்சம் மெட்ரோ டோக்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 18.75 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன' என்றார்.
இக்கண்காட்சி டிசம்பர் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைப் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டிஎம்ஆர்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







