அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மின் மீட்டர்களும் ஸ்மார்ட் ப்ரீபெய்டு ஆக இருக்கும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை (பொறுப்பு) அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்தார். மேலும், மீட்டர்கள் உற்பத்தியை அதிகரிக்குமாறு அதன் தயாரிப்பாளர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
தில்லியில் மின்சார அமைச்சகம் சார்பில் மின்சார மீட்டர் தயாரிப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய மின் துறை அமைச்சர் (பொறுப்பு) ஆர்.கே. சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மின்துறைச் செயலர் ஏ.கே. பல்லா, கூடுதல் செயலர் நந்தன் சஹாய் மற்றும் மத்திய மின் ஆணையம், பிஎஃப்சி, ஆர்இசி ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகள், மீட்டர் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கே. சிங் பேசியதாவது:
அடுத்த மூன்று ஆண்டுகளில் மின் அளவிடும் முறையானது ஸ்மார்ட் ப்ரீபெய்டாக இருக்கும். வீடுகளுக்கு மின் கட்டண பில் வருவது அருகிவிடும்.
இதனால், ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர்களின் உற்பத்தியை தயாரிப்பாளர்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த வகை மீட்டர்களின் விலையைக் குறைக்கவும் வேண்டும்.
வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர்களின் தேவை மிக அதிமாக இருக்கும்.
இதனால், அதிக அளவிலான உற்பத்தியை தயாரிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், தேவைப்பாட்டை எளிதாக சமாளிக்க முடியும்.
மின்சார அமைச்சக அதிகாரிகளும் ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர்கள் பொருத்துவதை கட்டாயமாக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.
மதிப்பீட்டு தொழில்நுட்பம் மற்றும் வணிக இழப்புகள் (ஏடி & சி) குறைப்பது, மின்விநியோக நிறுவனங்களின் நல்ல செயல்பாடு, எரிசக்தி சேமிப்பு ஊக்குவிப்பு, பில் தொகை செலுத்துவதற்கான எளிதான வழிமுறை போன்றவை மின் துறையை புரட்சிமயமாக்கும்.
மேலும், இது இளைஞர்களுக்கு திறன் மிக்க வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றார் ஆர்.கே. சிங்.
இக்கூட்டத்தின்போது, ஸ்மார்ட் மீட்டர்களின் அம்சங்கள், இந்திய தர நிறுவன (பிஐஎஸ்) சான்றளிப்பு, நடைமுறையில் உள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதியுடன் ஒத்திசைவு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும், மீட்டர் தயாரிப்பாளர்கள், மின் விநியோக நிறுவனங்கள், மின்னணு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் அனைத்து தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்கவும் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








