சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிய புதிய திட்டம்: ஜிபிஎஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கிறது போக்குவரத்து துறை

தில்லிச் சாலைகளில் அதிவேகமாக இயக்கப்படும் பொது போக்குவரத்து வாகனங்களை நவீனத் தொழில்நுட்ப வசதி மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுநர்களுக்கு அல்லது உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய

Updated On :21 மே 2018, 6:18 pm

தில்லிச் சாலைகளில் அதிவேகமாக இயக்கப்படும் பொது போக்குவரத்து வாகனங்களை நவீனத் தொழில்நுட்ப வசதி மூலம் கண்டறிந்து அதன் ஓட்டுநர்களுக்கு அல்லது உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய வசதியை போக்குவரத்துத் துறை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி சாலைகளில் அதிவேகத்துடன் ஓட்டப்படும் வாகனங்களால் அன்றாடம் பல்வேறு இடங்களில் விபத்துகள் நிகழ்கின்றன. இதனால், அவ்வப்போது மனித உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் அதிவேகமாக ஓட்டப்படும் வாகனங்களைக் கண்டறிவதற்காக கட்டுப்பாட்டு மைய'த்தை தில்லி போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.
ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்களின் இருப்பிடம், அவை எத்தனை கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன என்பன போன்ற தகவல்கள் இந்த மையத்தின் மூலம் பெறப்படும் வகையில் நவீனத் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்திற்கு அதிவேகமாக இயக்கப்படும் பொது வாகனங்கள் குறித்த விவரங்கள் உடனடியாகச் சென்றடைவதால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் அல்லது உரிமையாளர் முகவரி, அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதியின் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிப்பதற்கான சலான் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும்.
இந்த மையத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் அனைத்து விவரங்கள் தொகுப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட எந்த வாகனமும், கட்டுப்பாட்டு வேகத்தை மீறி அதிவேகமாக ஓட்டப்பட்டால், அந்த வாகனத்தின் பதிவு எண், எந்த இடத்தில் அந்த வாகனம் அதி வேகத்தில் இயக்கப்பட்டது என்பன போன்ற தகவல்கள் தானாகவே இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து சேர்ந்துவிடும். மேலும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுநரின் முகவரிக்கு அபராதச் சலான் அனுப்பப்படும்.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட எந்த வாகனமும் இந்த கண்காணிப்பு முறையில் இருந்து தப்ப முடியாது. இது தானியங்கி முறையில் செயல்படும் வசதியாகும். எனினும், தற்போது தில்லியில் சுமார் 35 சதவீத வாகனங்களில் மட்டுமே ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதனால், வாகனத் தகுதி பரிசோதனைக்காக போக்குவரத்து துறைக்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச் சான்றிதழ் அளிப்பதற்கு முன்னர், ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தில்லியில் இயக்கப்படும் கிளஸ்டர் பேருந்துகள், கிராமின் சேவா வாகனங்கள், ஆர்டிவி வாகனங்கள் ஆகியவை வேக விதிமீறலில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன. இதுபோன்ற வாகனங்களைக் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவோரை தண்டிக்க இந்த கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.