மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

நீடிக்கும் மழையால் தலைநகரில் இதமான வானிலை!

தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது

Updated On :3 செப்டம்பர் 2018, 7:22 pm

தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது லேசான தூறலுடன் மழை தொடர்ந்ததால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தில்லியில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தில்லி மட்டுமின்றி தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளான குருகிராம், காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் மழையின் தாக்கம் நீடித்தது. மழையின் காரணமாக தில்லி, நொய்டா பகுதிகளில் கூட்டம் மிகுந்த சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் அவ்வப்போது சுட்டுரைப் பக்கங்களில் பதிவிடப்பட்டது.
 ஆஷா சர்மா என்பவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், "நொய்டாவில் பலத்த மழை பெய்ததால் வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது' என்று குறிப்பிட்டிருந்தார். நொய்டாவைச் சேர்ந்த தனியார் பதிப்பகத்தில் பணியாற்றி வரும் அனுராக் தத்தா என்பவர் கூறுகையில், "நொய்டா செக்டார் 16 அருகே உள்ள ரஜ்னிகந்தா கிராஸிங் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் இருந்தது. இதனால், வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது' என்றார்.
இதேபோன்று, தில்லியில் மழையின் காரணமாக லட்சுமிநகர், கீதா காலனி, பட்பர்கஞ்ச், லாஜ்பத் நகர், பழைய தில்லி ரயில் நிலையம், யூசுஃப் சராய், தௌல குவான், ரஜௌரி கார்டன், ஆஸ்ரம் உள்பட பல இடங்களில் கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மழையின் காரணமாக திங்கள்கிழமை காலை 26 டிகிரி செல்சியாகப் பதிவாகியிருந்த வெப்பநிலை பிற்பகலில் 26 டிகிரி செல்ஸியஸாகக் குறைந்தது. இந்த மழையின் தாக்கம் அடுத்த 2-3 நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
ஹரியாணா மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சூறாவளி சுழற்சி இருப்பதன் காரணமாக தில்லியில் மழைப் பொழிவு இருந்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சீசனின் சராசரியைவிட 6 புள்ளிகள் குறைந்து 28 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருந்தது. தலைநகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இதமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.