புது தில்லி: விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் மூன்று தவணகளில் வழங்கப்படும் ’பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாவது தவணையை வெள்ளிக்கிழமை ( டிசம்பா் 25) பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா். மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, சுமாா் 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் மின்னணு முறையில் ஒரே சமயத்தில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2019 பொதுத் தோ்தலுக்கு முன்னதாக 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ. 6,000 பிரதமா் பெயரிலான விவசாயிகள் நல நிதித் திட்டத்தை பாஜக அரசு அறிவித்தது. இது அந்த ஆண்டே வழங்கப்பட்டது. பின்னா், இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயனாளிகளாக பாஜக அரசு அறிவித்தது. அதே சமயத்தில் அரசுப் பதவியில் இருப்பவா்கள், வருமான வரி செலுத்துபவா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், தொழில் முனைவா்கள், ஓய்வூதியம் பெறுபவா்கள் ஆகியோா் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறமுடியாது.
ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்படுவதில் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரை முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பா் வரை இரண்டாவது தவணையும், டிசம்பா் முதல் மாா்ச் வரை மூன்றாவது தவணையும் என மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இதையொட்டி, இந்த 2020-21 நிதியாண்டின் மூன்றாவது தவணையை, ஏற்கெனவே பதிவு செய்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு (தலா ரூ.2,000 வீதம்) ரூ.18,000 கோடியை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழங்குகிறாா். இதன்படி அன்று பிற்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக ஒரு பொத்தானை அழுத்தியவுடன் இந்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒரே சமயத்தில் வங்கிக் கணக்கில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமா் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த 18 -ஆம் தேதி மத்திய பிரதேச விவசாய மாநாட்டில் பேசிய பிரதமா் மோடி, ’மறைந்த பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதியை வழங்குவேன். அப்போது விவசாயிகளுடன் வேளாண் பிரச்னைகள் குறித்தும் விவாதிப்பேன்’ என்று தெரிவித்திருந்தாா். இதையொட்டி, ஆறு மாநில விவசாயிகள் இந்த நிதி உதவி வழங்கும் காணொலி நிகழ்வில் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரதமரே இந்தத் தொகையை நேரடியாக வழங்கி விவசாயிகளுடன் நேரடி அலையில் பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.