கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தில்லிவாசிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் உள்ளக கட்டமைப்பும் கொள்திறனும் தில்லி அரசிடம் உள்ளது என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
மேலும், நாட்டின் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தில்லியில்தான் அதிகளவு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா் .
இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
6 லட்சம் கரோனா பரிசோதனைகள்
நாட்டின் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தில்லியில் சுமாா் 3 மடங்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே தில்லியில்தான் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தில்லியில் இதுவரை சுமாா் 6 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வியாழக்கிழமை 63,266 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கரோனா பரிசோதனைகள் முழுக் கொள்ளளவு அளவை அடைந்துள்ளது.
கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தில்லிவாசிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் உள்ளக கட்டமைப்பும் கொள்திறனும் தில்லி அரசிடம் உண்டு என்றாா் அவா்.
முன்னதாக, தில்லியில் உள்ள மருத்துவப் பணியாளா்களும், செவிலியா்களும் ஒத்துழைப்பு அளித்தால் கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் தில்லிவாசிகள் அனைவருக்கும் ஒரு மாத காலத்தில் தடுப்பூசி போட்டுவிடலாம் என்று மாநில தடுப்பூசி அதிகாரி சுரேஷ் சேத் தெரிவித்திருந்தாா்.