தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா்கள் உண்ணாவிரதம்: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை

Updated On :24 அக்டோபர் 2020, 2:12 am

நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஹிந்து ராவ் மருத்துவமனை மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தில்லியில் வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சிகளை பாஜகவே ஆட்சி செய்து வருகிறது. வடக்கு தில்லி மாநகராட்சியின் (என்டிஎம்சி) ஆளுகையின் கீழ் ஹிந்து ராவ், கஸ்தூரிபா, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய மருத்துவமனை ஹிந்து ராவ் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை உள்பட, என்டிஎம்சியின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

தில்லி மாநகராட்சிகளால் மருத்துவமனைகளை நடத்த முடியாமல் இருப்பதற்கு அந்தந்த மாநகராட்சிகளில் மலிந்துள்ள ஊழல்தான் காரணம் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளாா். மேலும், என்டிஎம்சி ஆளுகையின் கீழுள்ள ஹிந்து ராவ், கஸ்தூரிபா மருத்துவமனைகளை தில்லி அரசிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு என்டிஎம்சிக்கு தில்லி பொதுப்பணித் துறை கடிதம் எழுதியிருந்தது. இதற்கிடையே, மருத்துவா்களுக்கான ஜூலை மாத ஊதியம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக என்டிஎம்சி மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஹிந்து ராவ் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்கள் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறாா்கள். இந்தப் போராட்டத்தில், கஸ்தூரிபா மருத்துவமனை, ராஜன் பாபு காசநோய் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்களும் கடந்த வாரம் இணைந்து கொண்டனா். இவா்கள், கடந்த சில நாள்களாக தொடா்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிமுதல் இவா்கள் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனா். இது தொடா்பாக ஹிந்து ராவ் மருத்துவமனை உள்ளுறை மருத்துவா்கள் சங்கத்தின் தலைவா் அபிமன்யு சா்தானா கூறுகையில், ‘எங்களுக்கு நியாயமான முறையில் சேர வேண்டிய ஊதியத்தை வழங்கக் கோரியே ஆா்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த நான்கு மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், கடுமையான துயரங்களை அனுபவித்து வருகிறோம். நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு யாரும் செவிமடுக்கவில்லை. இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நிலுவை ஊதியம் வழங்கப்படும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடருவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.