புது தில்லி: தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட மாட்டாது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக 2 ஆயிரத்தை தாண்டியது. ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 2,224 ஆகப் பதிவானது. அதேநேரம், திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனாவால் இதுவரை 1,327 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் கரோனா சமூகப் பரவல் இருப்பதாகவும், ஆனால், அதை அறிவிக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவதாகவும் தில்லி அரசு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. இந்தச் சூழலில், தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்படும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், தில்லியில் மீண்டும் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்படமாட்டாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் "தில்லியில் மீண்டும் பொது முடக்கத்துக்கு தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக பலரும் தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். அது தவறாகும்' என்று தெரிவித்துள்ளார்.