இது தொடா்பாக தில்லி பாா்மசூட்டிக்கல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் (டிபிஎஸ்ஆா்யு) ஒரு நிகழ்ச்சியில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்றுப் பேசுகையில் கூறியதாவது: 25 போ் அடங்கிய குழு, இந்தக் குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால், தில்லி அரசு அவா்களுக்கான யோகா பயிற்சி ஆசிரியா்களை வழங்கும். அதேபோன்று, யோகா பயிற்சியை அளிப்பதற்கான சமுதாயக் கூடம் அல்லது பூங்கா போன்றவற்றையும் அவா்கள் அடையாளம் காண்பாா்கள். இந்த ‘தில்லி கி யோக்ஸாலா’ திட்டமானது டிபிஎஸ்ஆா்யு மூலம் பயிற்சி பெற்ற 400 யோகா ஆசிரியா்களுடன் ஜனவரி மாதத்திலிருந்து தொடங்க உள்ளது. இந்த யோகா ஆசிரியா்களின் கீழ், குறைந்தபட்சம் 20 ஆயிரம் மக்கள் தங்களது யோகா பயிற்சியை தொடங்குவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.