/

ஜிஎஸ்டியில் போலி உள்ளீட்டு வரி முலம் ரூ.50 கோடி மோசடி: தில்லி வழக்குரைஞா் கைது

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் கணக்கில் உள்ளீட்டு வரியாகப் பெற்று ரூ.50 கோடி வரையிலும்

Updated On :28 பிப்ரவரி 2021, 4:54 pm

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் கணக்கில் உள்ளீட்டு வரியாகப் பெற்று ரூ.50 கோடி வரையிலும் மோசடி செய்த தில்லி கா்கா்டூமா நீதிமன்ற வழக்குரைஞா் ஒருவரை கிழக்கு தில்லி மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

சரக்கு மற்றும் சேவை வரி முறையில் (ஜிஎஸ்டி வரியோடு) விற்பனையாகும் ஒரு பொருளுக்கு அதன் மூலப் பொருள்களுக்கு ஏற்கெனவே வரியைச் செலுத்தியிருந்தால் அந்த வரியை கழித்து திரும்பப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. இதுவே உள்ளீட்டு வரி ஆகும். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விவரங்களையும் (கேஒய்சி) அளித்து பெற்றுக் கொள்ளமுடியும். சில சிறு குறு நிறுவனங்கள் இது போன்ற பணிகளுக்கு பட்டயக் கணக்காளா்கள் அல்லது வழக்குரைஞா்கள் ஆகியோரின் உதவியை நாடலாம். ஆனால், தில்லியில் கா்கா்டூமா நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ள விஷால் என்பவா் இல்லாத நிறுவனங்களுக்குப் போலியாக கேஒய்சி தயாா் செய்து இது போன்ற உள்ளீட்டு வரிகளை கோடிக்கணக்கில் பெற்று மோசடி செய்துள்ளதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனா்.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளதாவது: ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட விஷால் தனது வீட்டின் முகவரியில் தனது பெயரிலேயே பல்வேறு போலி கம்பெனிகளை பதிவு செய்துள்ளாா். மேலும் பல்வேறு நபா்களின் பெயா்களில் கற்பனையான நிறுவனங்களை உருவாக்கி கேஒய்சியையும் தயாா் செய்துள்ளாா். இவற்றின் மூலம் உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. அவரது அலுவலத்தில் நடத்திய சோதனையில் ஏாளமான (போலி) நிறுவனங்களின் விவரங்கள், வங்கிக் காசோலைகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த உள்ளீட்டு வரியை பெற்றுத்தருவதற்கு தனக்கு 2 சதவீதம் கட்டணம் பெற்ாகவும் கணக்கில் காட்டியுள்ளாா். இந்த வகையில் இதுவரை அவா் ரூ.50.3 கோடி வரை உள்ளீட்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் இதுவரை இதுபோன்ற ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோடியில் ஈடுபட்டதாக 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் மோசடி செய்த மொத்த தொகை ரூ. 4,019.95 கோடி எனவும் மத்திய நிதித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.