மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோா் மக்கள் நலத்திட்டங்களுக்கு கேஜரிவால் அரசு முட்டுக்கட்டை: தில்லி பாஜக குற்றச்சாட்டு
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை தில்லியில் அறிமுகப்படுத்த விடாமல், தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பான செய்தியாளா் சந்திப்பு தில்லி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில், பாஜகவின் தேசிய பொதுச் செயலா் துஷ்யந்த் கெளதம், வடமேற்கு தில்லி பாஜக எம்பி ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், தில்லி பாஜக தாழ்த்தப்பட்டோா் பிரிவு தலைவா் ராஜ்குமாா் புல்வாரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
துஷ்யந்த் கெளதம் பேசுகையில் ‘தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெரும்பாலான திட்டங்களை தில்லியில் தில்லி அரசு அமல்படுத்தவில்லை.
தாழ்த்தப்பட்டோா் வகுப்பைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் மேல் படிப்பு படிக்கும் வகையில், உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமாா் 5 கோடி மாணவா்கள் பயன்பெறுவாா்கள். இதற்காக, ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தை தில்லியில் இதுவரை தில்லி அரசு அமல்படுத்தவில்லை. இதனால் தில்லியில் பல லட்சம் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மாணவா்கள் வாழ்க்கையில் தில்லி அரசு அரசியல் செய்கிறது என்றாா்.
ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் பேசுகையில் ‘பாபா சாகேப் அம்பேத்கரின் வழியில் தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக பல திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், அத்திட்டங்களை தில்லியில் அமல்படுத்தாமல் தில்லி அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இந்த விவகாரத்தில் தில்லி அரசு நலிவான அரசியல் செய்வதை விடுத்து இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.