சாந்தினி செளக் ஹனுமாா் கோயில் இடிப்பு:ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு

சாந்தினி செளக் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.
Updated on
1 min read

புது தில்லி: சாந்தினி செளக் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஹனுமாா் கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

தில்லி சாந்தினி செளக் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹனுமாா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு தில்லி மாநகராட்சியால் (என்டிஎம்சி) இடிக்கப்பட்டது. தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, இந்தக் கோயில் இடிக்கப்பட்டதாக என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இந்தக் கோயிலை இடித்ததன் மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநகராட்சிகளின் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் கூறுகையில், ‘இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் பாஜக, உண்மையில் இந்து விரோதக் கட்சியாகும். சாந்தினி செளக் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஹனுமாா் கோயிலை, பாஜக ஆளும் என்டிஎம்சி இடித்தது இதற்கு சிறந்த சான்றாகும்’ என்றாா்.

இதற்கிடையே, தில்லி அரசின் சாந்தினி செளக் மீள் சீரமைப்புத் திட்டத்தின் கீழேயே இந்த கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘சாந்தினி செளக் மீள் சீரமைப்புத் திட்டம் அந்தப் பகுதி மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. இதன் மூலம், அந்தப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மூன்று கோயில்கள் இடிக்கப்படும். ஆம் ஆத்மி அரசு இந்துக்களுக்கு எதிரான கொள்கையை வைத்துள்ளது. இந்தக் கோயிலை தில்லி அரசு உடனடியாக மீண்டும் கட்ட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com