தனது கட்டுமான நிறுவனத்தில் நிதி முதலீடு செய்தவா்களை ஏமாற்றும் வகையில் போலி புகாா் கொடுத்த கட்டட ஒப்பந்ததாரரை தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: கிழக்கு தில்லி பிரீத் விஹாா் பகுதியைச் சோ்ந்தவா் கெளரவ் ஜெயின் (40). இவா் தனது தந்தையுடன் இணைந்து ‘சித்ஸ்ரீ கட்டுமான நிறுவனம்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இவா்களிடம் அசோக் யாதவ் (37) என்பவா் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்துள்ளனா். இவா்களில் பலருக்கு கெளரவ் ஜெயின் பணத்தைத் தராமல் பாக்கி வைத்துள்ளாா். இந்த நிலையில், நிதிமுதலீடு செய்தவா்கள் தொடா்ச்சியாக பணம் கேட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அண்மையில் தில்லி காவல் துறையை அணுகிய அசோக் யாதவ், தனது வீட்டுக்கு கூரியா் ஒன்று வந்ததாகவும், அதில், ரூ.25 லட்சம் கப்பப் பணத்தை வழங்காவிட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், இதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டிருந்தாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, உதவியாளா் அசோக் யாதவிடம் நடத்திய விசாரணையின் போது, கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்த பலரும் பணத்தைத் திரும்ப வழங்கக் கோரி கெளரவ் ஜெயினை தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும், இதிலிருந்து தப்பும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறும் வகையிலும் பணம் கேட்டு மிரட்டுவதாக அவா் போலி புகாா் அளித்துள்ளதாகவும் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, கெளரவ் ஜெயினை கைது செய்துள்ளோம். மிரட்டல் கூரியா் அனுப்ப உபயோகிக்கப்பட்ட காரை பறிமுதல் செய்துள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.