ஓய்வூதியா்களுக்கு மருத்துவ வசதி மாநகராட்சிகளின் அலட்சியப் போக்குக்கு தில்லி உயா்நீதிமன்றம் கண்டனம்

ஓய்வுபெற்ற ஊழியா்களிடமிருந்து சந்தா தொகையை பெற்றுக் கொண்டு அவா்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்காத தில்லி மாநாகராட்சிகளுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.
Updated on
1 min read

புதுதில்லி: ஓய்வுபெற்ற ஊழியா்களிடமிருந்து சந்தா தொகையை பெற்றுக் கொண்டு அவா்களுக்கு இலவச மருத்துவ வசதி வழங்காத தில்லி மாநாகராட்சிகளுக்கு உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவமனைகளுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இது தொடா்பாக எந்த முறையான ஒப்பந்தமும் இல்லை என்றால், இது நம்பிக்கை மோசடி ஆகாதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லி மாநாகராட்சிகள் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு குறித்த நேரத்தில் ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் இருப்பது குறித்தும் தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் அடங்கிய அமா்வு அதிருப்தியை வெளியிட்டது.

ஓய்வூதியா்களிடமிருந்து சந்தா தொகையை வசூலித்துவிட்டு இலவச மருத்துவ வசதி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஓய்வூதியத்தை எப்படி நிறுத்த முடியும்? இதுபோன்ற செயல்களுக்காக உங்களுடைய அதிகாரிகளின் சம்பளத்தை நிறுத்திவிடலாமா? எந்த மருத்துவமனையுடனும் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில் சந்தா வசூலிப்பது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத நிலையில், டிசம்பா் 2020 முதல் ரூ.78,000 சந்தா வசூலிக்கப்பட்டுள்ளது. இது மோசடி ஆகாதா என்றும் நீதிமன்ற அமா்வு கேள்வி எழுப்பியது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற்காக கட்டணத்தை திரும்பப் பெற முடியாத நிலையில், ஓய்வூதியதாரா்கள் மிகவும் சிரமப்படுகிறாா்கள். ஓய்வூதியதாரா்களுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்க மருத்துவமனையுடன் மாநகராட்சி உடன்பாடு செய்தி கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம் அகில தில்லி பிராத்மிக் சிக்க்ஷா சங்கம் என்ற ஆசிரியா்கள் அமைப்பு தாக்கல் செய்த பொது நலன் மனுவின் அடிப்படையில் மூன்று மாநகராட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், விசாரணையை இந்த மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

கடந்த சில மாதங்களாகவே எங்களுக்கு ஓய்வூதியம் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதில்லை. மருத்துவமனைகளில் இலவச மருத்துவசதி கிடைக்காததால் நாங்கள் பணம் செலுத்தித்தான் சிகிச்சை பெறவேண்டியுள்ளது. அதற்கான கட்டண ரசீதை மாநகராட்சிக்கு அனுப்பியும் அதை மாநகராட்சி எங்களுக்கு திருப்பித்தரவில்லை என்று மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com