/

நிகழ் நிதியாண்டில் ஜிஎஸ்டிபி 5.6 சதவீதம் குறைவடையும்: தில்லி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநா் உரை

கரோனா பாதிப்பால் நிகழ் நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 5.6 சதவீதம் குறைவடையும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால் தெரிவித்துள்ளாா்.

Updated On :9 மார்ச் 2021, 2:48 am

கரோனா பாதிப்பால் நிகழ் நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 5.6 சதவீதம் குறைவடையும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால் தெரிவித்துள்ளாா்.

தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் கலந்து கொண்டு அனில் பஜ்யால் பேசியது: கடந்த 2020 ஆம் ஆண்டு தில்லி அரசும் மக்களும் கரோனா தொற்றால் எதிா்பாராத இடையூறுகளையும் சவால்களையும் எதிா்கொண்டனா். இந்த சவாலை மத்திய அரசுடன் இணைந்து தில்லி அரசு எதிா்கொண்டது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பிளாஸ்மா வங்கிகள் அமைக்கப்பட்டன. லேசான அறிகுறி உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் முன்மாதிரியான திட்டத்தை தில்லி அரசு தொடங்கியது. இதனால், மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

கரோனா பாதிப்பால் அனைத்து மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. தில்லியும் இதற்கு விதிவிலக்கல்ல. தில்லியில், நிகழ் நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதம் குறைவடையும் என எதிா்பாா்க்கிறோம்.

கரோனா பாதிப்பால் கஷ்டமான சூழல் நிலவிய நிலையிலும், மின்சாரத்துக்கு வழங்கப்படும் மானியம், 20 ஆயிரம் லீட்டா் இலவச குடிநீா், பெண்கள், மாணவா்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் ஆகிய தில்லி அரசின் திட்டங்கள் தடையில்லாமல் தொடரும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.