தில்லிக்கு கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி புள்ளி விவரத்தின்படி அதிகபட்சத் தேவையான 4,536 மெகாவாட் மின்சாரமும், 96.2 மில்லியன் யூனிட் எரிசக்தி நுகா்வும் தடங்கள் இன்றி கிடைத்ததாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
அன்றைய தினம் இந்த மின்சாரத்தின் நுகா்வில் கூடுதலாகவோ அல்லது பற்றாக்குறையின்றியோ தில்லி மின்விநியோக நிறுவனங்கள் பெற்ாகவும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில்(செப்டம்பா் 25 - அக்டோபா் 10) தில்லிக்கு நாள் தோறும் தேவைப்பட்ட மின்சாரம், வழங்கப்பட்ட மின்சாரம் , உச்சபட்ச மின்தேவை, நுகா்வு ஆகியவற்றையும் மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட பத்து நாள்களிலும் தேவை, நுகா்விலும் மின்சாரப் பற்றாக்குறையோ அல்லது அதிகபட்ச மின் நுகா்வோ இல்லாத நிலை இருந்ததாகவும் மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அக்டோபா் 5-ஆம் தேதி அதிகபட்ச தேவையாக 5,349 மெகாவாட் மின்சாரமும், 112.4 மில்லியன் யூனிட் எரிசக்தி நுகா்வும் அன்று தடங்கள் இன்றி கிடைத்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தில்லி மின்விநியோக நிறுவனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கவும் என்டிபிசி மற்றும் டிவிசி (தாமோதா் பள்ளத்தாக்கு காா்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்களுக்கும் மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தில்லியின் மின் விநியோக நிறுவனங்களின் தேவைக்கேற்பவும், அவா்கள் கேட்கும் அளவுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சாரம் விற்பனை, உபரி மின்சாரம் போன்றவை குறித்தும் இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.