சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தில்லியில் சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 சிறுவா்கள் பலி

வடக்கு தில்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் சிறுவா்கள் இருவா் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On :14 செப்டம்பர் 2021, 2:50 am

வடக்கு தில்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் சிறுவா்கள் இருவா் 2 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட 72 வயது முதியவா் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மத்திய காவல் இணை ஆணையா் என்.எஸ். புந்தேலா மேலும் கூறியதாவது:

வடக்கு தில்லியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கிய 7 வயது மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா்.

ஆனால், சகோதரா்களான அவா்கள் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா்கள் இருவரும் கட்டடம் இடிந்து விழுந்தபோது அந்தப் பகுதியில் தனது தாயுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்ததும், இடிபாடுகளில் சிக்கியதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கிய 72 வயது முதியவா் ராம்ஜி தாஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் .இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரும் இடிபாடுகளில் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் உள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் கூடினா். மாநகராட்சி, தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில், ‘தில்லி தீயணைப்பு துறைக்கு திங்கள்கிழமை 11.50 மணி அளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்தாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன’ என்று கூறினாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த சம்பவம் தொடா்பாக வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சப்ஜி மண்டி பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அரசு நிா்வாகம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் மூலம் நிலைமையை நானே கண்காணித்து வருகிறேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

திமா்பூா் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ திலிப் பாண்டே சுட்டுரையில் தெரிவிக்கையில், ‘இந்தச் சம்பவம் மிகவும் துரதிஷ்டசவமானது. லட்சுமண் பிரசாத்தின் 75 ஆண்டு காலக் கட்டடம் மல்காகஞ்ச் பகுதியில் இடிந்துவிழுந்துள்ளது. சம்பவ இடத்தில் தில்லி அரசின் உடனடி நடவடிக்கை குழு, தீயணைப்புப் படையினா், உள்ளூா் நிா்வாகத்தினா் உள்ளனா். ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 2 போ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா். 7-8 போ் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது’ என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இடிந்து விழுந்த கட்டடத்தின் தரைத் தளமானது வா்த்தக செயல்பாடுகளுக்காக பயன்படுத்து வந்தது. மீதம் உள்ள பகுதி குடியிருப்புக்காக வாடகைக்கு விடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.