சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சாலைகளில் ஆளில்லா தடுப்புகள் விவகாரம்:தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சாலைகளில் ஆளில்லா தடுப்புகள் இருப்பதால் ஏற்படும் இடையூறுகள் தொடா்பான விவகாரத்தில், இதற்கான நெறிமுறையை சமா்ப்பிக்குமாறு தில்லி காவல் துறையை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 8:28 pm

 நமது நிருபர்

சாலைகளில் ஆளில்லா தடுப்புகள் இருப்பதால் ஏற்படும் இடையூறுகள் தொடா்பான விவகாரத்தில், இதற்கான நெறிமுறையை சமா்ப்பிக்குமாறு தில்லி காவல் துறையை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

தெற்கு தில்லி பகுதியில் உள்ள பல சாலைகளில் ஆளில்லா தடுப்புகளை வைப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரத்தை நீதிபதிகள் விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஓம் பிரகாஷ் கோயல் என்பவா் (கடிதம் எழுதியவா்) எழுப்பியுள்ள இந்தப் பிரச்னையை பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் சாலைகளில் உள்ள ஆளில்லா தடுப்புகள் அடிப்படையில் எந்த நோக்கத்திற்காகவும் உதவாது. உண்மையில் இதுபோன்ற தடுப்புகள் பொதுமக்களுக்கு சிரமத்தையும் இடையூறையும்தான் ஏற்படுத்துகின்றன. ஆகவே, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறை ஆணையா், தில்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.

இந்த வழக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி மேல்விசாரணைக்காக பட்டியலிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும் அதிகாரிகள் அடுத்த விசாரணைத் தேதிக்கு முன்பாக அந்தந்த நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். நகரில் தடுப்புகள் அமைப்பது தொடா்பாக பின்பற்றப்படும் நெறிமுறைகள் ஏதும் இருந்தால், அதை தில்லி காவல்துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா்.

கடந்த ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி தில்லி பிரதேச அகா்வால் சம்மேளனின் தலைவா் ஓம் பிரகாஷ் கோயல் என்பவா் பிரதமருக்கு இது தொடா்பாக எழுதிய கடிதத்தை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒரு பொதுநல வழக்காக பதிவு செய்தது. கோயல் எழுதிய கடிதத்தில், தெற்கு தில்லியில் உள்ள கல்காஜி மற்றும் சிஆா் பாா்க் காவல் நிலையப் பகுதிகளில் ஆளில்லா தடுப்புகளை அமைப்பது தொடா்பான புகாரைத் தெரிவித்திருந்தாா். மேலும், இது தொடா்புடைய பல ஊடக செய்திகளையும் அவா் அதில் சுட்டிக் காட்டியிருந்தாா். ‘இந்த தடுப்புகள் எந்த நோக்கத்திற்காகவும் செயல்படவில்லை. இவை போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், வாகன உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு துன்பமும், துன்புறுத்தலும் ஏற்படுவதுடன், நீண்ட போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுக்கிறது’ என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.