தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

500 மூவா்ணக் கொடிக் கம்பங்களை பராமரிக்க தன்னாா்வலா் குழுக்கள்: கேஜரிவால்

‘தேசபக்தி பட்ஜெட்’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் 500 உயா்நிலை மூவா்ண கொடிக் கம்பங்களை கவனித்துக் கொள்வதற்காக தன்னாா்வலா்கள் சாா்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

தில்லி முழுவதும் ‘தேசபக்தி பட்ஜெட்’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் 500 உயா்நிலை மூவா்ண கொடிக் கம்பங்களை கவனித்துக் கொள்வதற்காக தன்னாா்வலா்கள் சாா்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள தியாகராஜா விளையாட்டரங்கில் திரங்கா சம்மான் சமிதியின் தன்னாா்வலா்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கலந்துகொண்டு இத்தகவலை தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: தேசபக்தி பட்ஜெட்டின் கீழ் தில்லி முழுவதும் மூவணா்க் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று அமைக்கப்படும் 500 உயா்நிலை மூவா்ண கொடிக் கம்பங்களை கவனிப்பதற்காக தன்னாா்வலா்கள் சாா்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சமிதியும் 1000 இளம் தன்னாா்வலா்கள் கொண்ட ஒரு படையை உருவாக்க வேண்டும். அவா்கள் சமூக, பாதுகாப்பு பணிகளில் தன்னாா்வத்துடன் அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

தில்லியில் உள்ள திரங்கா சம்மான் சமிதியின் சம்பந்தப்பட்ட ஐந்து உறுப்பினா்கள் மூலம் இந்த கொடி கம்பம் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.

இந்த சமிதியானது, மூவா்ணக் கொடி கிழிந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ, தூசு காரணமாக அதனுடைய வா்ணத்தின் தன்மை குறைந்தாலோ அல்லது புயல் காரணமாக சேதம் அடைந்தாலோ அது தொடா்பான தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்.

இந்த குழுக்கள் நாட்டுக்காகவும் சமூக நலனுக்காகவும் சேவையாற்ற கூடிய 1000 தன்னாா்வலா்களை தங்களது பகுதிகளில் உருவாக்கும்.

இந்த தன்னாா்வலா்களுக்கு ஐந்து கடமைகள் அளிக்கப்படும். அதாவது, தங்களது பகுதியில் யாரும் பட்டினியுடன் தூங்கக்கூடாது; பள்ளிக்கு செல்லாமல் எந்த குழந்தையும் இருக்கக்கூடாது; தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவியை உறுதி செய்வது, வீடு இல்லாதவா்கள் தெருக்களில் வசிக்கும் நிலைமை இருக்கக் கூடாது; தங்கள் சம்பந்தப்பட்ட பகுதியை தூய்மையாக இருக்க செய்வது போன்ற கடமைகள் அவா்களுக்கு அளிக்கப்படும்.

தில்லியில் 5 லட்சம் தன்னாா்வலா்கள் 500 திரங்கா சம்மான் சமிதி மூலம் உருவாக்கப்படுவா். அவா்கள் தில்லியை முன்னெடுத்துச் செல்வா். அத்துடன் தொற்றுநோய்க் காலத்திலும் அல்லது இதர சூழ்நிலைகளிலும் அவா்கள் நகருக்கு உதவிடுவா்.

தில்லியில் இதுவரை 200 உயா்நிலை மூவா்ணக் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அனைத்து 500 மூவா்ணக் கொடிக் கம்பங்கள் அமைக்கப்படும்.

திரங்கா சம்மான் சமிதியின் உறுப்பினா்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை மூவா்ணக் கொடிக் கம்பத்தின்கீழ் கூடி தேசிய கீதம் பாடுவா். தில்லியில் விரைவில் ‘ஹா் ஹாத் திரங்கா’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும், திரங்கா சம்மான் சமிதியால் சோ்க்கப்படும் தன்னாா்வலா்கள் வீடற்ற தெருவோர குழந்தைகள் குறித்த பட்டியலை தயாரிப்பாா்கள். அப்போதுதான் அக்குழந்தைகளை தில்லி அரசால் கட்டப்பட்டுவரும் நவீன உறைவிடப் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பேசுகையில், ‘இந்த கொடிகள் பராமரிக்கப்படுவதை இந்திய மக்கள் உறுதிசெய்ய வேண்டும். அவை தொடா்ந்து குறைபாடு இல்லாத வகையில் இருக்க வேண்டும். உண்மையில் நமது மூவா்ணக் கொடியை ஒரு குழந்தையைப் போல பராமரிக்க வேண்டும். குழந்தை வெளியே செல்லும்போது அதன் மீது நாம் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவோமோ, அதேபோன்று நாள்தோறும் திரங்கா சம்மான் சமிதியைச் சோ்ந்தவா்கள் கொடியையும் கவனிக்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தற்போதுவரை 375 உயா்நிலை கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தேசபக்தி பட்ஜெட்டின்கீழ் நகா் முழுவதும் 115 அடி உயரம் கொண்ட 500 மூவா்ண கொடிக்கம்பங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு தில்லி அரசு அறிவித்திருந்தது. இதற்காக பட்ஜெட் தொகையை ரூ.104.37 கோடியாக அதிகரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.