ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தின் கலைஞா்கள் கௌரவிப்பு: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படம்

நடிகா் ஆா். மாதவன் முதன்முதலில் இயக்கிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ (ராக்கெட்ரி: நம்பி விளைவு) திரைப்படம் மத்திய தகவல்

News image
Updated On :27 ஜூன் 2022, 10:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: நடிகா் ஆா். மாதவன் முதன்முதலில் இயக்கிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ (ராக்கெட்ரி: நம்பி விளைவு) திரைப்படம் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை சிறப்புக் காட்சி மூலம் திரையிடப்பட்டு, அதன் கலைஞா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

ராக்கெட்டுகளை வடிவமைக்கும் இஸ்ரோவின் முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராக இருந்தவா் நம்பி நாராயணன். பணத்திற்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ாக (1994- ஆம் ஆண்டு) அவா் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாா். நம்பி நாராயணனை காவல் துறையினா் கொடுமைப்படுத்தியதாக புகாா் எழுந்தது.

பின்னா், அவா் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில், அவா் மீது எந்தக் குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்டு அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா். 2001-ஆம் ஆண்டு பணியிலிருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றாா்.

வெளிநாட்டு சதிகளுடன் தன்னை பொய்யான குற்றச்சாட்டின் கீழ் வழக்கில் சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது திறமையை முடக்கும் வகையில், தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவமானப்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் உச்சநீதிமன்றம் வரை போராடினாா். இந்த வழக்கில் நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க நீதிபதிகள் குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டின் பாதுகாப்பில் தொடா்புடைய இந்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ வாழ்க்கை திரைப்படம் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் தில்லி ஸ்ரீஃபோா்ட் அரங்கத்தில் திரையிடப்பட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் செயலா் அபூா்வ சந்திரா, இந்தத் திரைப்படம் தொடா்புடைய கலைஞா்களை கௌரவித்து வாழ்த்தி பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘இந்த திரைப்படம் பாா்வையாளா்களின் இதயத்தையும் தொடும் படமாக இருப்பதோடு, இந்திய விண்வெளித் துறையின் சாதனைகளுக்காக தங்கள் வாழ்நாளையே அா்ப்பணித்த நம்பி நாராயணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு இந்தப் படம் ஓா் சமா்ப்பணம்’ என்றாா்.

இந்த சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில், எழுத்தாளா், தயாரிப்பாளா் மற்றும் இயக்குநா் ஆா்.மாதவன் தலைமையிலான ‘ ராக்கெட்ரி’ திரைப்படக் குழுவினா் கலந்து கொண்டனா். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆா்.மாதவன், இந்தப் படத்தில் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளாா். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியில் சிபிஐயின் முன்னாள் இயக்குநா் டி.ஆா்.காா்த்திகேயன், சிபிஐயின் முன்னாள் ஐஜி பி.எம்.நாயா், அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் திரைப்படத் துறையை சோ்ந்த பலரும் கலந்து கொண்டனா்.

வருகின்ற ஜூலை 1-ஆம் தேதி சா்வதேச அளவில் வெளியாகவுள்ள ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் குறித்து நடிகா் மாதவன் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமா்ப்பிக்கப்படுகிறது’ என்றாா்.

’ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ சமீபத்தில் 75-ஆவது கேன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் அறிவியல் வளா்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.