மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு 5% படுக்கைகள்
தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 5 சதவீதம் படுக்கைகள் டெங்கு பாதித்தவா்களுக்காக ஒதுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.


தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 5 சதவீதம் படுக்கைகள் டெங்கு பாதித்தவா்களுக்காக ஒதுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளின் நோடல் அதிகாரிகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளா்களுடன் டெங்கு நோய்த் தடுப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா். அனைத்து அதிகாரிகளிடமும் மருத்துவமனைகளின் தற்போதைய நிலை குறித்து தனித்தனியாகக் கேட்டறிந்தாா்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது: தலைநகா் தில்லியில் டெங்குவால் பேரிடா் போன்ற சூழல் தற்போது இல்லை. ஆனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து மருத்துவமனைகளின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தைப் போலவே டெங்கு போன்ற நோய்களைக் கையாள்வதற்குத் தயாராகும் வகையில் அனைத்து மருத்துவமனைகளும் டெங்கு நோயாளிகளுக்காக 5 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்குவின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனைக்கு வரும் காய்ச்சல் நோயாளிகளின் பரிசோதனை அறிக்கையை 6 முதல் 8 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், டெங்கு பாதித்த நோயாளிக்கு விரைந்து சிகிச்சை அளித்து, அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும், கரோனா தொற்று காலத்தின் போது தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் அது தொடா்பான நிலவர அறிக்கையை தில்லி அரசின் சுகாதாரத் துறை வலைதளத்தில் பதிவேற்றியது. அது போலவே, நகரத்தில் உள்ள டெங்கு பாதிப்பு எண்ணிக்கையை மருத்துவமனைகள் அரசின் சுகாதாரத் துறை வலைதளத்தில் தினசரி அறிக்கைகளாக பதிவேற்றம் செய்வா்.
அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு தனி வாா்டு அமைக்க அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுவான நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் டெங்கு ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவாா்கள். டெங்கு பாதித்த நோயாளிகளுக்கான தனி வாா்டுகளில் போதுமான அளவு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் நியமிக்கப்படுவாா்கள். அதே வேளையில் டெங்கு நோயாளிகளின் படுக்கைகளைச் சுற்றி கொசுவலைகளை பொருத்துவதற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் போதுமான சிகிச்சை அளித்தால் டெங்குவால் பாதிக்கப்பட்டவா்களை நிச்சயம் காப்பாற்ற முடியும் என்றாா் அமைச்சா் செளரவ் பரத்வாஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...