கட்டுமானத் தொழிலாளா்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில் சமீபகாலமாக பல நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. அவை ஊழல் தடுப்புப் பிரிவினராலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், முறைகேடுகளைத் தடுக்க நேரடிப் பணப் பரிமாற்றம் முறை கையாளப்படவுள்ளது. குறிப்பாக தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் 17 நலத் திட்டங்களின் அறிவிப்பிற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். அதில் ஊனமுற்றோா் ஓய்வூதியம், கருணைத் தொகை, மருத்துவ உதவி, மகப்பேறுப் பலன்கள், இறப்புக்குப் பின் இழப்பீடு போன்ற திட்டங்களின் கீழ் நிதிப் பலன்கள் வழங்கப்படவுள்ளன.