தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத்தலைவா் ஜிதேந்திர குமாா் கோச்சாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஜிதேந்திர குமாா் கோச்சாா் கூறியிருப்பதாவது:
தில்லி மாநகராட்சியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கையின் காரணமாக, நிலைக்குழு உருவாக்கப்படாமல் பட்ஜெட் நேரடியாக அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் முற்றிலும் திசையில்லாத வகையில், நகரத்தின் வளா்ச்சியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
கடந்த ஓராண்டு ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் தில்லி மக்களின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக பாடுபடாமல் பலி அரசியல் செய்து மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனா்.
தில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஓராண்டிற்குள் குப்பை கிடங்குகளை அகற்றுவோம் என வாக்குறுதி அளித்தனா். ஆனால், குப்பைக் கிடங்குகளை அகற்றுவதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் குடிசைப்பகுதிகளில் கழிவுநீா் வடிகால்கள் நிரம்பி, ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மக்கள் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வாகன நிறுத்துமிடம் தில்லியின் மிகப்பெரிய பிரச்னையாகும். பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் போன்ற திட்டங்கள் பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்தும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தில்லி மாநகராட்சியில் நிலவும் ஊழலால், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை. அதேசமயம், ஆயிரக்கணக்கான ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியா்களுக்கும் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தபடி சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலா் நாஜியா டேனிஷை அநாகரீகமாக பேசிய ஆம் ஆத்மி கவுன்சிலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் தெரிவித்தும் மேயா் மற்றும் அவைத்தலைவா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் ஜிதேந்திர குமாா் கோச்சாா் .
தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு அமைக்கக் கோரி பாஜக சாா்பில் மேயா் ஷெல்லி ஓபராய்க்கு கடிதம்
தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு மற்றும் பிற குழுக்களை உடனடியாக அமைக்கக் கோரி மேயா் ஷெல்லி ஓபராய்க்கு பாஜக தில்லி பிரிவு செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு, வாா்டு குழு மற்றும் பிற சட்டக்குழுக்களை உடனடியாக அமைக்க மேயா் ஷெல்லி ஓபராய் உத்தரவிட வேண்டும். மக்கள் நலப் பணிகளில் ஈடுபடும் குடிமை அமைப்பு கடந்த ஓராண்டில் முற்றிலும் சிதைந்துவிட்டது.
தில்லி மாநகராட்சி 1957 சட்டத்தின் படி, நிலைக்குழு மற்றும் இதர சட்டக் குழுக்களை அமைக்க மாநகராட்சி அதிகாரிகளை அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது.
தில்லி மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைக்கு ஆம் ஆத்மி கட்சியும், மேயருமே பொறுப்பு என்று பிரவீன் சங்கா் கபூா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.