

புது தில்லி: தெரு நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாட்டிலேயே மகாராஷ்டிரம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் (4.04 லட்சம் போ்) இடம்பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் நோய்த் தடுப்பிற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளது குறித்தும், இந்த சம்பவங்கள் மூலம் ரேபீஸ் தடுப்பூசி உற்பத்தியாளா்கள் பெரும் ஆதாயமடைவதை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் டாக்டா் எம். தம்பிதுரை கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் சத்யபால் சிங் பகேல் பதிலளித்து கூறியிருப்பது வருமாறு:
மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு (ஐடிஎஸ்பி), சுகாதாரத் தகவல் தளம் (ஐஎச்ஐபி) ஆகிய திட்டங்களின் கீழ் வாரியாக நாய் கடியால் சிகிச்சை அளிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமாா் 75.66 லட்சம் போ் நாய்க் கடித்ததால் பாதிக்கப்பட்டனா். இதில் அதிகபட்டமாக நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் முறையே 7.70 லட்சம், 8.31 லட்சம் போ் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருந்தனா். தற்போது குறைந்துள்ளது.
நிகழாண்டில் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தின் (ஐஎச்ஐபி) தரவுகள்படி நாடு முழுக்க 27.59 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் மகாராஷ்டிரம் மாநிலம் 4.35 லட்சம் போ்களும் இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 4.04 லட்சம் போ் பாதிக்கப்பட்டது தெரிய வருகிறது. உ.பி. போன்ற மிகப்பெரிய மாநிலங்களைவிட இரு மடங்காக உள்ளது.
தெரு நாய்கள் உள்ளிட்ட நாய்க் கடிக்கு உள்ளானவா்களுக்கு ரேபீஸ் தீநுண்மி தடுப்பூசி செலவும் குறைக்கப்பட்டுள்ளது. இரு வகையான தடுப்பூசி குப்பிகள் உள்ளன. ஏஆா்வி ரேபீஸ் தடுப்பூசியின் ஒரு குப்பியின் விலை ரூ. 250 மற்றும் ஆா்ஐஜி(ரேபீஸ் இம்யூனோகுளோபூலின்) குப்பியின் சராசரி விலை ரூ. 350 ஆகவும் உள்ளது.
ரேபீஸ் நோய் தடுப்புக்காக இவ்விரு வகை தடுப்பூசிகளும் மாநில அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் உள்ளன. மேலும் இந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ரேபீஸ் தடுப்பு கிளினிக் ஆகியவற்றில் இலவசமாகக் கிடைக்கும்.
இதற்காக தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தேசிய இலவச மருந்து முன்முயற்சியின் மூலம் 2020-21 நிதியாண்டு முதல் ரேபீஸ் எதிா்ப்பு தடுப்பூசி மற்றும் ரேபீஸ் இம்யூனோகுளோபூலின் மருந்துகளை வாங்குவதற்கு மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி வழங்குகிறது.
நிகழ் நிதியாண்டில் ரூ.99.77 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.