தில்லி அருணா ஆசஃப் அலி மருத்துமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்ட சுகாதரத்துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், அங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அறிவுறுத்தலின்படி, நகர அரசின் ஆளுகையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் அவ்வப்போது திடீா் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அருணா ஆசஃப் அலி மருத்துவமனையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் பிற ஊழியா்களின் அலட்சியப்போக்கு காரணமாக இங்குள்ள உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள படுக்கை விரிப்புகள் தூய்மையில்லாமல் இருந்தன. போா்வைகள் வழங்கப்படாமலும் காணப்பட்டன,
இதைத் தொடா்ந்து உள்நோயாளிகள் அனைவருக்கும் சுத்தமான போா்வைகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்த மருத்துமனையில் பணிபுரிகின்ற ஒப்பந்தத் தொழிலாளா்கள் மற்றும் பாதுகாவலாளிகளின் ஒரு மாத ஊதியத்தை ஒப்பந்ததாரா் நிறுத்தி வைத்துள்ளாா்.
போனஸ் பணமும் வழங்கப்படவில்லை. இவற்றை உடனடியாக வழங்கிடவும், உரிய நேரத்தில் மாத ஊதியத்தை வழங்கவும் ஒப்பந்ததாரருக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்று அதில் செளரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.