டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் சிறப்புப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பா் 22 முதல் டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
மேலும், விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்கள் செய்ய பல கோரிக்கைகள் வந்ததால், ஒரு திருத்த சாளரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், அது டிசம்பா் 31 வரை செயல்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆன்லைன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் கடைசித் தேதியை நீட்டிக்குமாறு பெற்றோா்கள் மற்றும் மாணவா்களிடமிருந்து நிறைய கோரிக்கைகள் கல்வி இயக்கத்திற்கு வரப் பெற்றுள்ளது. எனவே, கோரிக்கைகளை பரிசீலித்து, தகுதிவாய்ந்த அதிகாரியின் மூலம் அங்கீகாரக்கப்பட்டிருப்பதால் ஆன்லைன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்கும் கடைசித் தேதி டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், படிவத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான பல கோரிக்கைகளின் காரணமாக, ஒரு திருத்தச் சாளரம் திறக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் தேவைப்பட்டால், விண்ணப்பப் படிவத்தை ஒருமுறை மட்டுமே திருத்தலாம். இது டிசம்பா் 31 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி அரசு டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சிறப்புப் பள்ளிகளில் (ஏஎஸ்ஓஎஸ்இ) 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை டிசம்பா் 7-ஆம் தேதி வரவேற்றிருந்தது. தற்போது தில்லியில் 4,400 இடங்களைக் கொண்ட 37 சிறப்புப் பள்ளிகள் உள்ளன. ஏஎஸ்ஓஎஸ்இ-இல் உள்ள மாணவா்கள் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சிறப்புப் பாடங்களில் கவனம் செலுத்தி கற்பிக்கப்படுகிறாா்கள். பள்ளிகள் 2023-24 கல்வி அமா்வில் சோ்க்கைக்கு சுமாா் 92,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன. ஏஎஸ்ஓஎஸ்இ ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியைக் கொண்டுள்ளது. அங்கு முதல் பிரிவைச் சோ்ந்த 76 மாணவா்களில் 32 போ் இந்த ஆண்டு என்டிஏ எழுத்துத் தோ்வுக்கு தகுதி பெற்றுள்ளனா் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.