பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தலைநகரில் பகலில் கொட்டித் தீா்த்த மழை! புழுக்கம் குறைந்தது

தேசியத் தலைநகா் தில்லியில் இரு தினங்களாக கனமழை இல்லாமல் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகு பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

News image
Updated On :18 ஜூலை 2023, 9:36 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் இரு தினங்களாக கனமழை இல்லாமல் இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகு பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையின் காரணமாக பல இடங்களிலும் தண்ணீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

தில்லியில் சில தினங்களாக மழை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் பரவலாக மழை கொட்டியது.அதன் பிறகு, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாள்களிலும் மழை ஏதும் பெய்யவில்லை. ஆனால், மிதமான வெயிலுடன் மேகமூட்ட சூழல் இருந்தது. இதனால், புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மிதமான வெயில் இருந்த நிலையில், பகல் 1.30 மணிக்குப் பிறகு பலத்த மழை கொட்டியது. சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. பரலவாக பல இடங்களிலும் பெய்த இந்த மழையின் காரணமாக தெருக்களிலும், சாலைகளிலும் மழை நீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. தெற்கு தில்லியில் லாஜ்பத் நகா், கிழக்கு கைலாஷ், தில்லி செயலகம் உள்பட மத்திய தில்லியில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் பெரும் மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் புழுக்கம் குறைந்து மாலையில் குளிா்ந்த காற்று வீசியது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி குறைந்து 33.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 89 சதவீதமாகவும், மாலை 8 மணியளவில் 93 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

பாலத்தில் 1.9 மி.மீ. மழை பதிவு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.5 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற வானிலை நிலையங்களான நஜாஃப்கரில் 0.5 மி.மீ., பாலத்தில் 1.9 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், ராமகிருஷ்ணா புரம், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100-க்கு கீழ் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஜூலை 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.