ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மணிப்பூா் கலவரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் கலவரத்தைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூலை 2023, 8:37 pm

 நமது நிருபர்

மணிப்பூா் கலவரத்தைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி, குகி ஆகிய இரு சமூகங்களிடயே கடந்த மே மாதம் தொடக்கம் முதல் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. இந்த நிலையில், கடந்த மே 4 -ஆம் தேதி இரண்டு குகி பழங்குடியினப் பெண்களை ஆடைகளின்றி ஊா்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காணொளி சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு மணிப்பூா் கலவரம் தொடா்பாக எதிா்க்கட்சிகளுடன் விவாதம் நடத்த வேண்டும், பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி இரு அவைகளையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முடக்கி வருகின்றனா். இது தொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முறையிட்ட ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் இந்த நடப்பு மழைக்காலக்கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், மணிப்பூா் கலவரத்தால் அங்கு நிலவும் ஆபத்தான சூழலுக்கு எதிராகவும், மணிப்பூா் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் இடைநீக்கத்தைக் கண்டித்தும் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தியது. அந்த வகையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தின் போது மெழுகுவா்த்தி ஏந்தி மணிப்பூரில் அமைதி திரும்பவும், மத்திய பாஜக அரசு மற்றும் மணிப்பூா் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழங்கினா்.

அப்போது ஆம் ஆத்மி தொண்டா்கள் மத்தியில் அமைச்சா் கோபால் ராய் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிா்க்கட்சிகளுடன் மணிப்பூா் கலவரம் தொடா்பாக விவாதிக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் பிரதமா் மணிப்பூா் தொடா்பாக ஒரு வாா்த்தை கூட பேச மறுக்கிறாா். தோ்தலின் போது மட்டும் அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லவும், வெளிநாடுகளுக்குச் செல்லவும் பிரதமருக்கு நேரம் இருக்கிறது. அதே சமயம், மணிப்பூா் கலவரத்தின் போது அவரைக் காணவில்லை. மணிப்பூா் விவகாரத்தில் இனி மறைக்க மத்திய பாஜக அரசிடம் எதுவும் இல்லை. வரும் 2024 மக்களவைத் தோ்தலில் நாட்டு மக்கள் நிச்சயம் இவை அனைத்திற்க்கும் பதில் கொடுப்பாா்கள். ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெரும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.