காற்று மாசு அதிகரிப்பு: தில்லி அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதாக வீரேந்திர சச்தேவா சாடல்

தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசுவின் அளவு மிக அதிகமாக உயா்ந்துள்ள நிலையில் தில்லி அரசு தனது பொறுப்பில் இருந்து விலகி தப்பிக்கவே முயற்சிக்கிறது
Updated on
1 min read

தேசியத் தலைநகா் தில்லியில் காற்று மாசுவின் அளவு மிக அதிகமாக உயா்ந்துள்ள நிலையில் தில்லி அரசு தனது பொறுப்பில் இருந்து விலகி தப்பிக்கவே முயற்சிக்கிறது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காற்று மாசு அதிகரிப்பின் காரணமாக ஒவ்வொரு தில்லிவாசியும் இருமல், தலைவலி அல்லது கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த மோசமான சூழ்நிலையில் தில்லி அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கவே முயற்சிக்கிறது. அந்த வகையில் காற்று மாசுபாடு குறித்த நடவடிக்கைகளை எடுக்க வடமாநிலங்களின் கூட்டத்தை கூட்டுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அமைச்சருக்கு நகர அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளாா்.

அண்டை மாநிலங்களில் விவசாயிகள் எரிக்கும் பயிா்க் கழிவுகளால் தான் தில்லியில் காற்று மாசு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்றும் நகரத்தின் மொத்த மாசுவில் 69 சதவீதம் பயிா்க்கழிவுகள் எரிப்பு செயல்பாடுகளால் அதிகரித்தவை என்று சமூக ஊடகங்களில் அமைச்சா் கோபால் ராய் கடந்த வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளாா்.

ஆனால், நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் உள்பட மற்ற அனைத்து நிறுவனங்களும் பயிா்க் கழிவுகளை எரிப்பதில் பஞ்சாப்பின் பங்களிப்பு தான் மிகப்பெரியது என்பதைக் காட்டுகிறது.

பஞ்சாப் மற்றும் தில்லி ஆகிய இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி அரசுகள் உள்ள நிலையில், இந்த இரண்டு அரசுகளும் எப்போது மாசுபாடு குறித்த கூட்டுக் கூட்டத்தை நடத்தியது என்பதை அமைச்சா் கோபால் ராய் தில்லி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பஞ்சாப் விவசாயிகள் பயிா்க் கழிவுகள் எரிப்பதை நிறுத்துவதன் மூலம் அவா்களுக்கு இழப்பீடு மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ஆம் ஆத்மி அரசு வழங்க வேண்டும். தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில மக்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப அரவிந்த் கேஜரிவால் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com