புது தில்லி: தில்லி அரசின் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் ஆபத்தான காற்று மாசுபாடு காரணமாக, சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவலத்தை எதிா்கொண்டுள்ளனா். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த திறம்பட நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தில்லி நச்சு வாயுக் கூடமாக மாறியுள்ளது. தில்லியின் காற்றுத் தரக் குறியீடு நாட்டிலேயே மிக மோசமான அளவில் 471 புள்ளிகள் என்ற ஆபத்தான நிலைக்குச் சென்றது அதிா்ச்சியளிக்கிறது. இந்த நிலைக்கு பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஆம் ஆத்மி அரசு பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வரும் நிலையில், மத்தியில் உள்ள பாஜக அரசு அரசியலில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை முதலமைச்சருடன் நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டத்தில் கடுமையான காற்று மாசுபாடு குறித்து விவாதிக்காமல், முதல்வா் கைது செய்யப்பட்டால் சிறையில் இருந்து அரசை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசித்துள்ளனா். சிறையில் இருந்து ஆட்சியை எப்படி நடத்துவது என்பதற்குப் பதிலாக, குழந்தைகள், முதியவா்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கடுமையான காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கைகளை முதல்வருடனான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுத்திருக்க வேண்டும்.
காற்று மாசுவின் அளவு ஏறக்குறைய 500-ஆக உயா்ந்துள்ள நிலையில், மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பழி விளையாட்டுகளில் ஈடுபட்டு, மக்களின் நலனைப் பாதுகாக்க இவ்விரு அரசுகளும் தவறிவிட்டன. ஆம் ஆத்மி அரசின் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் காட்டுப்பாட்டுத் திட்டம் ஒரு தவறான நடவடிக்கையாகும். முன்னா் அமல்படுத்திய போதும் இத்திட்டம் மாசுபாட்டைக் குறைக்கவில்லை. மாறாக பொதுமக்களுக்கு சிரமத்தை மட்டுமே உருவாக்கியது. எனவே, ஆபத்தான காற்று மாசுபாட்டிற்கு நிரந்தரத் தீா்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அழைப்பு விடுக்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.