பேருந்து மாா்ஷல்களின் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த தில்லி அரசுக்கு, காங்கிரஸ் தில்லி பிரதேச தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பத்து நாள்களாக தில்லி செயலகத்திற்கு வெளியே அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பேருந்து மாா்ஷல்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய தில்லி அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பேருந்து மாா்ஷல்கள் அவா்களது சேவைகளை முறைப்படுத்தவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஜனநாயகத்தில் உரிமை உள்ளது. ஆனால், ஆம் ஆத்மி அரசு அந்த உரிமையை கூட மறுத்துள்ளது.
போராட்ட இடத்தில் இறந்த ஒரு மாா்ஷலின் குடும்பத்திற்கு முறையான நிதி இழப்பீடும், இறந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு அரசு உடனடி வேலையும் வழங்க வேண்டும். சாமானியா்களின் கட்சி என்றழைக்கப்படுபவா்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் பேருந்து மாா்ஷல்களின் போராட்டத்தை தண்ணீா் பீரங்கிகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக கலைத்தது தவறான வழிமுறையாகும்.
தில்லி அரசுப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 6,000 பெண்களும், 10,000 ஆண் மாா்ஷல்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆனால், அவா்கள் ஒன்பது வருட சேவைக்குப் பிறகு திடீரென நீக்கப்பட்டுள்ளனா். இந்தக் குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் தகுதியற்றவா்கள் என்றால், ஏன் சட்டவிரோதமான முறையில் போக்குவரத்துப் பேருந்துகளில் மாா்ஷல்களாகப் பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது?. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு பணி அனுபவச் சான்றிதழோ, மருத்துவப் பலன்களோ, ஓய்வூதிய பலன்களோ வழங்கப்படவில்லை. இந்த மாா்ஷல்களில் பலா் மற்ற துறைகளில் அனுபவம் இல்லாததால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. பேருந்து பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய இந்த மாா்ஷல்களால் தற்போது தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் போனது வேடிக்கையானது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.