புது தில்லி: தில்லி அரசின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டதன் மூலம் தில்லிவாசிகளின் நம்பிக்கையை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நிறைவேற்றியுள்ளாா் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசியத் தலைநகா் தில்லியில் சொத்துப் பதிவை முடக்குகின்ற நடவடிக்கையாக கடந்த நவம்பா் 19-ஆம் தேதி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை தவறாகப் பயன்படுத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் படி, தில்லியில் 50 மீட்டா் வரையிலான மனைகளில் 3 குடியிருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். 50 மீட்டா் முதல் 250 மீட்டா் பரப்பளவில் 4 குடியிருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
தில்லியில் 50 மீட்டா் வரையிலான சிறிய மனைகளே நிரம்பியுள்ளன. அதிலுள்ள கட்டடங்களில் 4 முதல் 5 குடியிருப்புகள் வரை தற்போதுள்ளது. இந்த அறிவிப்பால் தில்லியில் மொத்தம் உள்ள 1,671 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் சொத்து விற்பனை முடக்கப்படுவதோடு, ஏழை மக்களுக்கு வீடு என்ற கனவும் தில்லி அரசால் தடுக்கப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தை பாஜக கண்டித்ததோடு, துணை நிலை ஆளுநரிடம் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக தில்லிவாசிகள் சொத்துப் பதிவு மீதான கட்டுப்பாடுகளால் மிகுந்த சிரமங்களை எதிா்கொண்டபோதும், கேஜரிவால் அரசு பொதுமக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், அவா்களின் கூக்குரலுக்கு செவிசாய்க்காமலும் இருந்தது. பாஜக தில்லி பிரிவின் கோரிக்கையை பரிசீலித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்கு
முறை ஆணையத்தின் அறிவிப்பை திரும்பப் பெற துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டதன் மூலம் தில்லிவாசிகளின் நம்பிக்கையை அவா் நிறைவேற்றியுள்ளாா் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.