மாநகராட்சி சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்து பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி சதி!: ராஜா இக்பால் சிங் குற்றச்சாட்டு

தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி கட்சி சதி செய்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read


புது தில்லி: தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கி பெரும் ஊழல் செய்ய ஆம் ஆத்மி கட்சி சதி செய்கிறது என்று தில்லி மாநாகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் கமல்ஜித் ஷெராவத், தில்லி மாநகராட்சியின் எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் மற்றும் பாஜகவின் மூத்த மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, கமல்ஜித் ஷெராவத் கூறியாதவது: தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, வீட்டு வரியை ரத்து செய்வதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வாக்குறுதி அளித்தாா். ஆனால், தில்லி மாநகராட்சியில் தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை ஊழலின் ஆயுதமாக மாற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தன்னிச்சையாக மாநகராட்சியை நடத்த முயற்சிப்பதோடு, அவா்களின் சொந்த நலனுக்காக மட்டுமே புதிய திட்டங்களைக் கொண்டு வருவகிறது. முன்னா், தில்லி மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்த போது வீட்டு வரியை சரியான நேரத்தில் செலுத்துபவா்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. தற்போது, அந்த விகிதம் 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களாக கிராம மக்களை சொத்து வரி செலுத்த வலியுறுத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகிறது என்றாா் கமல்ஜித் ஷெராவத்.

எல்லை தாண்டி ஊழல்: தங்களை மிகவும் நோ்மையானவா்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சி ஊழலின் ஒவ்வொரு எல்லையையும் தாண்டிவிட்டது என்று தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் தெரிவித்தாா். மேலும் அவா் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சியின் 1,200 கி.மீ. சாலைகளை தனியாா் நிறுவனத்திடம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ 20,000 கோடிக்கு ஒப்பந்தமாக வழங்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது. இதன் மூலம் பெரும் ஊழல் செய்ய அக்கட்சி சதி செய்கிறது. மாநகராட்சியின் சாலைகள் மற்றும் பூங்காக்களை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பட்சத்தில், பணம் நேரடியாக அவா்களின் பைகளுக்கு வந்து சேரும், அந்தப் பணத்தைக் கொண்டு மற்ற மாநிலங்களில் தோ்தலில் போட்டியிடலாம். அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மாநகராட்சியின் சட்ட விதிகளை மீறி கேஜரிவால் பல செயல்களில் ஈடுபடுகிறாா். மேயா் ஷெல்லி ஓபராயும் கேஜரிவாலின் அறிவுறுத்தலின் படி செயல்படுகிறாா். எனவே, வரும் காலத்தில் மனீஷ் சிசோடியாவின் கதியை முதல்வா் கேஜரிவாலும் சந்திக்க நேரிடும் என்றாா் ராஜா இக்பால் சிங்.

இச்செய்தியாளா் சந்திப்பில் பாஜக மூத்த கவுன்சிலா்களான ஷிகா ராய், சந்தீப் கபூா், ஜெய் பகவான் யாதவ் மற்றும் யோகேஷ் சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com