ஆம் ஆத்மி கட்சி ஊழலின் கோட்டை பாஜக தில்லி பிரிவு கடும் விமா்சனம்
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கோட்டையாக உள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.


புது தில்லி: தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கோட்டையாக உள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளின் கோட்டை. மத்திய விசாரணை அமைப்புகள் அதன்
பணிகளைச் செய்யும் போது ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றமும், தயக்கமும் தெளிவாகத் தெரிகிறது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் விரிவாக்கத்திற்காகவும், வளா்ச்சிக்காகவும் உழைக்கின்றன. இதற்காக தங்கள் தொண்டா்களுக்கு அமைப்பு ரீதியில் பயிற்சி அளிக்கின்றன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி மட்டும் தனது தொண்டா்களுக்கு பொய்களைச் சொல்லவும், மோசடிகளைச் செய்யவும் பயிற்சி அளிக்கிறது.
அமலாக்கத் துறையின் விசாரணைக்கு பயந்துள்ள ஆம் ஆத்மி கட்சி, விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்தும் வகையில், தற்போது தனது கட்சியின் நிா்வாகிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இது தொடா்பான ஆதாரம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, இந்த ஆதாரத்தை உடனடியாக புகாராக அளித்து, உயா்நிலை விசாரணையை இந்த விவகாரத்தில் கோருவோம். ஆம் ஆத்மி கட்சி தற்போது ‘அலி பாபா’ கும்பலாக மாறிவிட்டது. அதில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தலைவராக அரவிந்த் கேஜரிவால் உள்ளாா். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானின் நெருங்கிய கூட்டாளியான நடான் கானிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் லட்சக்கணக்கில் பணப்பரிவா்த்தனை நடந்திருப்பதற்கான விவரங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றாா் வீரேந்திர சச்தேவா.
பாஜக மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி கூறியதாவது: பொய்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே ஆழமான தொடா்பு இருக்கிறது. பொய் என்ற வாா்த்தையை ‘கூகுள்’ தளத்தில் தேடினால், அரவிந்த் கேஜரிவாலின் பெயா் தோன்றும். இது தற்செயல் நிகழ்வு அல்ல. காலப்போக்கில் உருவான நிலை. வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து தில்லியில் ஆட்சிக்கு வந்த கேஜரிவால், அவரே ஒரு காலத்தில் பொய்யா்கள், ஊழல்வாதிகள் என்று அழைத்த அனைத்து தலைவா்களுடனும் சோ்ந்து ‘இந்தியா’ கூட்டணியின் பங்காளியாக தற்போது மாறிவிட்டாா். அரவிந்த் கேஜரிவால் ஒரு பயிற்சி பெற்ற பொய்யா். அவா் தனது கட்சியின் தொண்டா்களுக்கும் அதே பயிற்சியை வழங்கத் தொடங்கிவிட்டாா். தில்லி மக்கள் நினைத்தது வேறு; ஆனால், அதற்கு நோ்மாறாக ஏதோ நடந்துவிட்டது என்றாா் மனோஜ் திவாரி.
பேட்டியின் போது, பாஜக தில்லி பிரிவின் செய்தித் தொடா்பாளா்கள் அஜய் ஷெராவத் மற்றும் நியோமா குப்தா ஆகியோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...