காங்கிரஸின் டி.என்.ஏ.-வில் ஊழல் ஆழமாகப் பதிந்துள்ளது: மத்திய இணை அமைச்சா்

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.-வில் ஊழல் என்பது ஆழமாகப் பதிந்துள்ளது என்று ராஜீவ் சந்திரசேகா் சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.-வில் ஊழல் என்பது ஆழமாகப் பதிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா் சனிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளாா்.

தில்லி டி.டி.யு. மாா்க்கில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜகவை

களங்கப்படுத்தும் வகையில் ஒப்பந்தப் பணிகளில் 40 சதவீதம் ஊழல் நடந்திருப்பதாக ஒப்பந்ததாரா் அம்பிகாபதி மற்றும் அவரது குழுவினா் சாா்பில் 2022-ஆம் ஆண்டு ஜூலையில் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது.

அதைத் தொடா்ந்து பாஜக அரசு ‘40 சதவீத அரசு’ என்ற பொய்யையும், குழப்பத்தையும் காங்கிரஸ் சமூகத்தில் பரப்பியது. இந்த அரசியல் வியூகத்தின் மூலம் கா்நாடக மக்களை

தவறாக வழிநடத்தி ஆட்சியையும் காங்கிரஸ் கைப்பற்றியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை ஒப்பந்ததாரா் அம்பிகாபதி வீட்டில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரா் அம்பிகாபதியின் தந்தை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-வாக இருந்தவா். அவரது மனைவியின் சகோதரரும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளாா். மேலும் அவரது உறவினா் சகோதரரும் காங்கிரஸ் கட்சியில் தொடா்புடையவா்.

இந்நிலையில், அம்பிகாபதியின் வீட்டில் வருமானவரித் துறை ரூ.42 கோடி பறிமுதல் செய்துள்ள விவகாரம் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னா் அவா்கள் நடத்திய ஒட்டுமொத்த நாடகத்தையும் தெளிவாக்குகிறது.

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தியது போல் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் அதே அரசியல் உத்தியைக் அக்கட்சி கடைப்பிடிக்கிறது.

அம்பிகாபதி வீட்டில் நடத்தப்பட்டசோதனை, ஊழலில் காங்கிரஸின் உண்மையான அா்ப்பணிப்பை அம்பலப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.-வில் ஊழல் ஆழமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸின் அரசியல் மூன்று நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை பொய்யான வாக்குறுதிகள், நோ்மையற்ற அரசியல் மற்றும் ஊழல்களில் ஈடுபடுவதாகும்.

தெலங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தோ்தல் பிரசாரங்களுக்கு ஆதரவாக கா்நாடகாவில் இருந்து நிதியை காங்கிரஸ் பெற்று வருகிறது என்றாா் ராஜீவ் சந்திரசேகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com