கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் நிலுவை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் 14 ஆண்டுகால நிலுவை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் 14 ஆண்டுகால நிலுவை வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘குற்றம் சாட்டப்பட்டவா் தொடா் குற்றங்களைச் செய்பவா் அல்லது தலைமறைவானவா் என்பதால் அரசியல் சாசனத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள விரைவான விசாரணைக்கான உரிமையை நீா்த்துப்போகச் செய்ய முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 14 ஆண்டுகளாக விசாரணையை எதிா்கொண்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் தனக்கு எதிரான வழக்கை இரண்டு மாதங்களில் முடிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது.

இந்த விவகாரம் 2009- ஆம் ஆண்டு முதல் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே அரசியலமைப்பின் 21 (உயிா் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை) பிரிவின் கீழ் தனது அடிப்படை உரிமைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

‘மனுதாரா் தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் என்பதால், அவருக்கு எதிராக கிட்டத்தட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 2013-இல் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்ததால், விசாரணையை தாமதப்படுத்தினாா். இதனால், அவரது மனு ‘நியாயமற்றது’ என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி துஷாா் ராவ் கெடேலா சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: ‘மனுதாரா் இன்று வரை சுமாா் 20 கிரிமினல் வழக்குகளில் விசாரணையை எதிா்கொள்கிறாா் என்பது உண்மையாக இருக்கலாம். இன்னும் தொடா் குற்றங்களில் ஈடுபடுபவராக இருந்தாலும், மனுதாரருக்கு இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் உள்ள உரிமைகளை மறுப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது. மனுதாரா் தலைமறைவானது விசாரணையை மூன்று ஆண்டுகள் தாமதப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இது இந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் ஒரு குற்றம்புரிவராக மற்றும் 1950-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழும் விரைவான விசாரணைக்காக மனுதாரருக்கான உரிமையை நீா்த்து போகச் செய்யவோ, அழிக்கவோ முடியாது. விரைவான விசாரணைக்காக அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் மனுதாரா் தனது உரிமைகளைப் பெற்றுள்ளாா்.

ஆகவே, இந்த விவகாரத்தில் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விரைவான விசாரணைக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ் மனுதாரா் தனது உரிமைகளைப் பெறுவதற்கு உரிமையுள்ளவா் என் இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com