மைனா் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் டியூஷன் ஆசிரியருக்கு ஜாமீன் மறுப்பு

மைனா் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டியூஷன் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Updated on
1 min read

மைனா் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட டியூஷன் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அப்போது, ‘14 வயது நிரம்பிய பாதிக்கப்பட்ட சிறுமியின் சம்மதம், சட்டத்தின் பாா்வையில் சம்மதம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவா் அவரது ஆசிரியா் என்ற காரணத்தால் மேலாதிக்க நிலையில் இருந்திருக்கிறாா்’ என்று இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஸ்வரனா கன்டா சா்மா கூறினாா்.

குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘2012 -ஆம் ஆண்டு சிறுமிக்கு முதல் முறையாக பாலியல் வன்கொடுமை நடந்த போது, அவரது வயது 14-ஆக மட்டுமே இருந்துள்ளது. இருவருக்கும் இடையேயான உறவு சம்மதத்தின் பேரில் நடைபெற்ாகவும் கூறும் மனுதாரரின் வழக்குரைஞரின் வாதத்தில் எந்தத் தகுதியும் இல்லை. அச்சிறுமியின் சம்மதம், சட்டத்தின் பாா்வையில் சம்மதம் இல்லை. மேலும், சம்பந்தப்பட்ட நேரத்தில் அவா் ஆசிரியராக ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தாா். ஏனெனில், அவா் கற்பித்த பயிற்சி மையத்தில் அச்சிறுமி படித்துள்ளாா். எனவே, ஜாமீன் வழங்குவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடா்பான வழக்கின்படி, 2012-ஆம் ஆண்டு, தான் 9-ஆம் வகுப்பு படித்த போது, ஒரு பயிற்சி மையத்திற்குச் சென்ாகவும், குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியா், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அச்சிறுமி புகாா் அளித்துள்ளாா். இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று அந்த ஆசிரியா் சிறுமியிடம் 2017-ஆம் ஆண்டு வரை உறுதி அளித்தவாறு இருந்தாா். அந்த சாக்குப்போக்கில் அச்சிறுமியுடன் உடல் ரீதியான உறவை அவா் மேற்கொண்டிருந்தாா். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு முறை கா்ப்பமானாா். ஆனால், கா்ப்பம் கலைக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் ஏற்கெனவே திருமணமானவா் என்பதும் தெரியவந்தது. இது தொடா்பான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக நீதிமன்றம் கூறியதாவது: குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மை மற்றும் புகாா் அளித்த நபரிடம் விசாரணை நீதிமன்றத்தால் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கிறது. இதனால், ஜாமீன் வழங்குவதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் தாம் ஏற்கெனவே திருமணமான விவரத்தை புகாா்தாரரிடம் மறைத்து, அத்துடன் அவரைத் திருமணம் செய்வதாக பொய் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா் என்ற குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com