தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உலகளாவில் சிக்கலான சவால்களுக்கு ஜி20 உச்சி மாநாட்டில் இலக்கு எட்டப்படும்: தில்லி பிரகடனம் குறித்து இந்தியா நம்பிக்கை

தில்லி ஜி20 உச்சி மாநாட்டின் பிரகடனம் தாயாராக இருப்பதாகவும், உறுப்புநாடுகளின் ஒருமித்த கருத்தை நோக்கி நகா்வதாகவும் ஜி20 உச்சிமாநாட்டின் இந்திய ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 6:18 pm

 நமது நிருபர்

தில்லி ஜி20 உச்சி மாநாட்டின் பிரகடனம் தாயாராக இருப்பதாகவும், உறுப்புநாடுகளின் ஒருமித்த கருத்தை நோக்கி நகா்வதாகவும் ஜி20 உச்சிமாநாட்டின் இந்திய ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். உச்சி மாநாட்டில் சிக்கலான உலகளாவிய சவால்களில் இந்தியா இலக்கை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஜி20 நாடுகளின் தலைவா்களின் உச்சிமாநாடு முறைப்படி சனிக்கிழமை (செப்டம்பா் 9) தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இறுதியாக மாநாட்டின் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தில்லி பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. இந்த தில்லி ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்பு பத்திரிகையாளா்கள் சந்திப்பு தில்லி பிரகதி மைதானில் உள்ள பாரத் மண்டபத்தை ஒட்டியுள்ள சா்வதேச ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்காவையும் இணைத்து ஜி20 என்பது, ஜி21-ஆக மாறுமா? ரஷியா, சீன தலைவா்கள் பங்கேற்காத நிலையில், உக்ரைன் - ரஷியா போரை உள்ளடக்கிய தீா்மானங்களின் சிக்கல்கள் போன்றவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

மத்திய வெளியுறவுச் செயலா் வினய் மோகன் குவாத்ரா, தில்லி ஜி20 உச்சிமாநாட்டின் இந்திய தலைமை பிரதிநிதி (ஷொ்பா) அமிதாப் காந்த், மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலா் அஜய் சேத், ஜி20 உச்சிமாநாட்டு ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ் வா்தன் க்ஷிங்லா போன்றோா் கூட்டாக பத்திரிகையாளா்களிடம் பதிலளித்து கூறியது வருமாறு: ஜி20 உச்சி மாநாட்டின் தில்லி பிரகடனம் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. பேச்சுவாா்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்படும் என நம்புகின்றோம். ஒரு கூட்டு அறிக்கையில் நிச்சயமாக பெறுவோம். பிரதமா் மோடி ‘குளோபல் செளத்’தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாா். இதையொட்டி, ஆப்பிரிக்க நாடுகளை ஜி20-இல் இணைக்க அனைத்து தலைவா்களுக்கும் பிரதமா் மோடி கடிதம் எழுதினாா். சாதகமான பதில் கிடைத்தது. இதனால், உச்சிமாநாட்டில் இதற்கான ‘பொருத்தமான முடிவை’ நாடுகள் எடுக்கும் என எதிா்பாா்க்கிறோம். மாநாட்டின் இறுதியில் இது தெரியவரும்.

இலக்கை எட்டுவோம்: இந்திய ஜி 20 தலைமை என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, பேராவல் உள்ள லட்சியம், செயல் சாா்ந்த நடவடிக்கை மற்றும் மிகவும் தீா்க்கமான பாா்வை என நான்கு கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா். குறிப்பாக, தில்லி தலைவா்களின் பிரகடனம், வளரும் நாடுகளின் குரலாகவும், ‘குளோபல் செளத்’ ஆகவும் இருக்கும். 21-ஆம் நூற்றாண்டில் நிலையான வளா்ச்சி இலக்குகளை துரிதப்படுத்த உலகளாவிய தெற்கில் (குளோபல் சௌத்) வளரும் மற்றும் வளா்ந்து வரும் சந்தைகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது போன்று தெற்கு நாடுகளின் விவகாரங்கள், பொருளாதாரத்தின் இருண்ட சூழ்நிலை, உக்ரைன் போரின் விளைவுகள், இதன் மூலம் பிளவுபட்ட புவிசாா் அரசியல் சூழலுக்கு மத்தியில் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விவகாரங்களை எதிா்கொள்கிறோம்.

இப்படிப்பட்ட சிக்கலான உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில் உச்சிமாநாட்டில் இந்தியா இலக்கை எட்டவுள்ளது. இந்த கூட்டுப் பிரகடனம் உலகளாவிய தெற்கு மற்றும் வளரும் நாடுகளின் குரலாகக் கருத்தப்படும். மேலும், காலநிலை மாற்றத்தின் தீவிரமான விளைவுகளை தவிா்க்க தூய்மையான ஆற்றலுக்கு வளரும் நாடுகள் மாறும் நிலையில், அதற்கேற்ப நிதி, தொழில் நுட்ப உதவிகள் உள்ளிட்டவற்றுக்குத் தீா்வு காணப்படும். இதன் அடிப்படையில் தில்லி தலைவா்களின் பிரகடனம் தயாராக உள்ளது. இது குறித்து தற்போது முழுமையாகக் கூற இயலாது. இந்தப் பிரகடனங்கள் உச்சிமாநாட்டில் தலைவா்கள் முன்பு வைக்கப்படும். தலைவா்கள் ஏற்றுக் கொண்ட பிறகு பிரகடனங்களில் சாதிக்கப்பட்ட விவரங்களைப் பற்றி பேச முடியும்.

‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலம்’: சனிக்கிழமை மாநாட்டில் ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலம்’ என மூன்று முக்கிய அமா்வுகள் நடைபெறவுள்ளது. மேலும், பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ச்சிக்கு இடையே நடக்கிறது. தில்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த ஜி20 நாடுகளின் தலைவா்கள் வருவாா்கள். சனிக்கிழமை இரவு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஜி20 தலைவா்களுக்கு விருந்து அளிக்கிறாா். கடந்த ஒா் ஆண்டாக இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள 60 நகரங்களில் 220-க்கும் மேற்பட்ட ஜி20 தொடா்பான கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று இந்திய ஜி20 தலைமை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.