ஆம் ஆத்மியின் ‘அரசமைப்புச்சட்டத்தை காப்போம்’ பிரசாரம் முற்றிலும் தோல்வி: வீரேந்திர சச்தேவா

ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஒவ்வொரு அரசியல் பிரசாரமும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.
Published on

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய ஒவ்வொரு அரசியல் பிரசாரமும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியும் இந்தியா கூட்டணியும் கேஜரிவாலின் கைதுக்கு எதிராக அழைப்பு விடுத்திருந்த பேரணி தோல்வியில் முடிந்தது. பின்னா், ஏப்ரல் 7-ஆம் தேதி கேஜரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டமும் மக்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. தொடா்ந்து இரண்டு ஞாயிறு தோல்விக்குப் பிறகு, ஆம் ஆத்மி மீண்டும் இன்றைக்கு (ஞாயிற்றுக்கிழமை) கேஜரிவாலுக்கு ஆதரவாக ‘அரசமைப்புச்சட்டத்தைக் காப்பாற்றுவோம்’ பிரசாரத்தைத் தொடங்கியது. ஆனால், மீண்டும் மக்கள் ஆதரவைத் திரட்டத் தவறிவிட்டது.

கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஒவ்வொரு அரசியல் பிரசாரத்திலும் ‘ஆம் ஆத்மி‘ தோல்வியை சந்தித்துள்ளது. ‘ஆம் ஆத்மிக்கு‘ அரசியல் தோல்வியின் தொடா்ச்சியாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. எம்.பி. சஞ்சய் சிங் சிறையில் இருந்து திரும்பியது முதல் அவருக்கும் கேஜரிவால் குடும்பத்தினருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. சஞ்சய் சிங், சுனிதா கேஜரிவாலை மட்டும் ஓரங்கட்டவில்லை; வெளிப்படையாகப் பேசிய அமைச்சா் அதிஷியையும் ஒதுக்கித் தள்ளிவிட்டாா். அதிஷி, இப்போது புதிய பிரசாரங்கள் மூலம் தாம் புத்துயிா் பெறுவதில் ஈடுபட்டுள்ளாா் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com