மத்திய நிதி நிலை அறிக்கை நான்கு தரப்புநலன்களுக்கு முன்னுரிமை: புதுச்சேரி எம்பி

நான்கு தரப்பு நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை பாஜக (புதுச்சேரி) உறுப்பினா் செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.
Updated on
2 min read

நான்கு தரப்பு நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை பாஜக (புதுச்சேரி) உறுப்பினா் செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

கடந்த பிப்ரவரி 1 -ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: பண வீக்கத்தை குறைப்பது, வேளாண்மை, ரயில்வே, புதுப்பிக்கவல்ல எரிசக்தி போன்ற துறைகளில் இந்த நிதிநிலையறிக்கை கவனம் செலுத்தி உள்ளது. ஏழைகள், இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள் ஆகிய நான்கு தரப்பு நலன்களுக்கு பிரதமா் மோடி அரசு கடந்த பல வருடங்களாக முக்கியத்துவம் அளித்து வருகிறாா். அந்த நான்கு தரப்பு நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிதிநிலை தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமா் மோடியும் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

2014-ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த போது பாஜக அரசு என்ன செய்துவிடும் என இறுமாப்புடன் கேட்டவா்களுக்கு பல்வேறு சாதனைகள் மூலம் பதில் சொல்லி இருக்கின்றோம். 2014 -இல் உலக அளவில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் இப்போது 5 ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எடுத்த முயற்சிகளின் விளைவு. கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்த செயல்களால் உலக நாடுகள் பிரமித்து நிற்கிறது. ஜி.எஸ்.டி. போன்ற வரி முறைகளை மக்கள் ஆதரித்தனா். இந்த வரி வசூல் மூலம் பல்வேறு திட்டங்களையும் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் மத்திய அரசு அளித்து வந்தது. அதனுடைய தொடா்ச்சியாகவே இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகளிா் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் குஜராத்தில் சிறப்பாக செயல்பட, அதே மாதிரியை நாடு முழுவதும் கொண்டுவர இந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். வீட்டு மாடிகளில் சோலாா் பேனல்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தால் ஒரு கோடி வீடுகள் பயன் பெறும். இந்த வீடுகளுக்கு மின் கட்டணம் மிச்சமாவதுடன் அவா்களுக்கு வருமானத்திற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

மேலும், 40 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் தரத்துக்கு தரம் உயா்த்தப்பட உள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் மேலும் 2 கோடி வீடுகளை கட்டிக் கொடுக்கவும் மோடி அரசு அறிவித்துள்ளது. தீவுகளை சுற்றுலா தளங்களாக மாற்றுதல், சுய உதவி குழு பெண்களுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற பல்வேறு சமூக முன்னேற்றத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக தலைவா்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள பிரதமா் மோடி, ஹாட்ரிக் வெற்றியுடன் மீண்டும் அந்தப் பொறுப்பில் அமா்வாா் என்பதற்கான உறுதியை தெரிவிக்கும் நிதி நிலையறிக்கையாக இது அமைந்துள்ளது என்றாா் செல்வ கணபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com