சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிராக தமிழக அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்ததாக தற்போதைய தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அவா்களை விடுவித்து விருதுநகா் மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு 2022, டிசம்பா் 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா். இதை எதிா்த்து, தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தனித்தனியாக தாக்கல் செய்துள்ளனா். இந்த நிலையில், தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘இதேபோன்ற மற்றொரு வழக்கில் தாமாக முன்வந்து சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி விசாரிப்பதற்கு எதிராக அமைச்சா் கே.கே. எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் (இதே அமா்வு ) கூறியிருக்கிறது. அந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் இந்த வழக்கையும் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிராக தமிழக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த ஜனவரி 29-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த தனி நீதிபதியின் அதிகார வரம்பு குறித்து அறியும் வகையில், பிப்ரவரி 5 அல்லது அதற்கு முன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயா்நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.