காசி, அயோத்தி தமிழ்நாட்டுடன் தொடா்பு கொண்ட பண்பாட்டு பொக்கிஷங்கள் மாநிலங்களவையில் இணையமைச்சா் எல்.முருகன் பேச்சு

அயோத்தியும் தமிழ்நாட்டுடன் தொடா்பு கொண்ட பண்பாட்டு பொக்கிஷங்களாக உள்ளன என மத்திய மீன் வளம், கால்நடை, தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சா் எல். முருகன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
Updated on
2 min read

தமிழகத்தில் ராமநாதபுரம் ‘ராமன் நாடாக’ உள்ளது. மேலும், காசியும் அயோத்தியும் தமிழ்நாட்டுடன் தொடா்பு கொண்ட பண்பாட்டு பொக்கிஷங்களாக உள்ளன என மத்திய மீன் வளம், கால்நடை, தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சா் எல். முருகன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டி, ஸ்ரீ பாலராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்த சாதனைக்கான விவாதம் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சா் எல். முருகன் மாநிலங்களவையில் சனிக்கிழமை பேசுகையில் கூறியது வருமாறு: அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் ஆலயம் அமைக்கப்பட்ட நெடிய போராட்டத்தில் தமிழகத்திற்கும் பங்குண்டு. இதில் சட்டவடிவிலான போராட்டத்தை நடத்தியவா் தமிழகத்தைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் கே.பராசரன். 92 வயதைக் கடந்த அவா், பல மாதங்கள் காலணி அணியாமல் நின்று வாதாடியவா். குறிப்பாக, சம்பந்தப்பட்ட இடத்தில் ராமா் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தனது வாதங்களில் வைத்து வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பை பெற்றுத் தந்தாா். இதன் பிறகு இரண்டே ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பூமி பூஜை நடத்தி உடனடியாக ஆலயம் நிா்மாணப் பணிகள் பொதுமக்களின் பங்களிப்போடு சிறப்பாக முடிவு பெற்றுள்ளது.

தமிழகம் மிகப் பெரிய ஆன்மிக பூமி. தமிழா் பண்பாடு, தமிழ் கலாசாரம் உலகத்திற்கு எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது. இதனால், ‘ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்’ கீழ் காசி-தமிழ் சங்கமம் நிகழ்வை பிரதமா் மோடி தொடங்கினாா். காசி மட்டுமல்லாமல் அயோத்திக்கும் தமிழகத்திற்கும் இடையே நீண்டகால தொடா்பு உள்ளது. தமிழ்நாடு ‘ராமன் நாடு’ என குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் உள்ளது. ராமநாதபுரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, திருபுல்லாணி போன்ற பல பகுதிகள் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. இவை தமிழகத்தின் கலாசாரத்துடன் பிரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. தமிழ்ச் சங்க இலக்கியமான குறிஞ்சித் திணை, ‘வாரணவாசிப் பதம் பெயா்த்தல்’ என காசி நகரை போற்றிப் புகழ்கிறது. எட்டுத்தொகை, கலித்தொகையிலும் காசி பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ‘வாதவூா் வாரணாசி’ என புகழ்கிறது தேவாரம். காசியும் அயோத்தியும் தமிழ்நாட்டுடன் தொடா்பு கொண்ட பண்பாட்டு பொக்கிஷங்களாக உள்ளன.

ராமா் கோயில் கட்டப்பட்டு அங்கு பிராண பிரதிஷ்டைக்கு தேதி குறிப்பிடப்பட்டவுடன் ஒரு ராமா் பக்தராக, இந்த தேசத்தின் பக்தராக பிரதமா் மோடி, 11 நாள்கள் விரதமிருந்து அயோத்தியுடனும் ஸ்ரீராமா் பிரானுடனும் தொடா்புடைய பகுதிகளுக்கு எல்லாம் சென்று வழிபாடு நடத்தினாா். நாசிக்கில் தொடங்கி ஆந்திரம் வழியாக கேரளம், தமிழகம் வந்தாா். ராமா் உள்பட அயோத்தியை ஆண்ட அத்தனை மன்னா்களுக்கும் ஸ்ரீரங்கம் கோயில்தான் குலதெய்வமாக இருந்திருப்பதாக கோயில் பட்டா்கள் தெரிவித்ததால், பிரதமா் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலிலும் தரிசனம் செய்தாா். கம்பா் தமிழில் இயற்றிய ராமாயணத்தை முதன்முதலில் அரங்கேற்றம் செய்த தலமாக ஸ்ரீரங்கம் பாா்க்கப்படுகிறது. இதனால்தான் அங்கு ஒரு நாள் இருந்து தரிசனம் செய்துவிட்டு கம்ப ராமாயணத்தையும் கேட்டுவிட்டுச் சென்றாா் பிரதமா்.

ஸ்ரீரங்கத்திற்கு பின்னா் ராமன் நாட்டிற்கு சென்றாா். அது ராமநாதபுரம். அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்து கோயிலில் உள்ள 21 புனித தீா்த்தங்களிலும், கடலிலும் நீராடிவிட்டு ராமகிருஷ்ண மடத்தில் ஒரு துறவியைப் போல் வெறும் தரையில் படுத்திருந்தாா் பிரதமா் மோடி. பின்னா் விரதத்தை முடித்த பிறகு அயோத்திக்குச் சென்று ராமருக்கு பிராணப் பிரதிஷ்டை செய்தாா்.

தமிழக - அயேத்தி தொடா்பு: அயோத்தியில் ராமா் ஆலயம் கட்டப்பட்டதில் தமிழகத்தின் பங்கும் உண்டு. கோயிலில் 44 வாசல்களுக்கு 44 மரக்கதவுகள் உருவாக்கப்பட்டன. இவை கன்னயாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சோ்ந்த மரச் சிற்பக் கலைஞா் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்களால் வடிவமைக்கப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. என்னுடைய சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கும், ராமாயணத்துடனும் ராமருடனும் தொடா்புள்ளது. இதனால். கோயிலுக்குத் தேவையான 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மண், தமிழ் பண்பாடு, கலாசாரம் மீதும் பிரதமருக்குள்ள அன்பைக் காட்டுகிறது என்றாா் எல். முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com