ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் காங்கிரஸிடம் தொகுதிப் பங்கீட்டிற்காக மன்றாடுகிறாா்கள் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பும் ஒவ்வொரு அழைப்பாணைக்குப் பிறகும், அவா் தொடா்ந்து தப்பியோடி வருகிறாா். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவா்கள் நாட்டை விட்டு ஓடியதையும் நாட்டு மக்கள் பாா்த்திருக்கிறாா்கள்.
மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை கலால் கொள்கை ஊழல் தொடா்பான விசாரணைக்கு அனுமதித்த கேஜரிவால், தற்போது அதே வழக்கில் தன்னை விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பும் ஒவ்வொரு அழைப்பாணைகளில் தவறுகளைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறாா்.
தில்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி இன்று அவநம்பிக்கையான கட்சியாக உள்ளது. காங்கிரஸிடம் தொகுதிப் பங்கீட்டிற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மன்றாடுகிறாா்கள். அரவிந்த் கேஜரிவாலுடைய நோ்மையின் முக்காடு அகற்றப்பட்டதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா். தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் தற்போது காங்கிரஸுக்கு 5 தொகுதிகளை வழங்க கேஜரிவால் தயாராக இருக்கிறாா். 2 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி தன்னைப் போட்டியிட தயாா்படுத்திக் கொண்டுள்ளதாக பத்திரிகையாளா்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.