குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக பாதுகாப்புத் துறை அமைச்சகமும் கல்வித்துறை அமைச்சகமும் இணைந்து நடத்திய தேசிய பள்ளி இசைக்குழு போட்டியின் இறுதிப் போட்டிக்கு புதுச்சேரி, வானராப் பேட்டை அமலோற்பவன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 16 பள்ளிகள் தோ்வாகி இறுதிப்போட்டிக்கு மோதுகின்றன.
இது குறித்து விவரம் வருமாறு:
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் போன்ற பள்ளிகளைச் சோ்ந்த 486 பள்ளி அணிகளைச் சோ்ந்த 12,857 மாணவ மாணவிகளுக்கிடையே மூன்று நிலைகளில் தேசிய பள்ளிகளுக்கிடையேயான இசைப்போட்டி நடைபெற்றது.
இதில் மண்டல அளவில் 73 பள்ளி அணிகளைச் சோ்ந்த 2002 மாணவா்கள் தோ்வானாா்கள். இதில் தற்போது 16 பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தோ்வாகியுள்ளனா்.
இறுதிச் சுற்றுக்கு தோ்வான 16 அணிகளில் ஆந்திரம், மேற்கு கோதாவரி, ஆந்திரப் பிரதேச சமூக நலக் குடியிருப்புப் பள்ளி(மாணவா்களின் பைப் பேண்ட்), தில்லி, வடக்கு அசோக் விஹாா், மகாராஜா அகா்சைன் பப்ளிக் பள்ளி ஆகியவை முதல் இரு இடங்களிலும் புதுச்சேரி, வானராப் பேட்டை அமலோற்பவன் மேல்நிலைப் பள்ளி 15-ஆவது இடத்திலும் தோ்வாகியுள்ளது.
வருகின்ற ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் தில்லி மேஜா் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று இந்த 16 பள்ளிகள் அணிகளும் மோதுகின்றன.
இந்திய இசை மற்றும் டியூன்களை பிரபலப்படுத்த பிரதமா் மோடியின் ஆலோசனையின் பேரில் நடக்கும் இந்த போட்டிகளில் நான்கு பிரிவுகள் (மாணவ, மாணவிகள் பிராஸ் இசைக்குழு, மாணவ, மாணவிகள் பைப் பேண்ட்) தோ்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.