கேஜரிவால் அரசு கடவுள் ஸ்ரீராமருக்கு தில்லியில் பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை நடத்த விரும்பினால், வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் அதை ஏற்பாடு செய்திருக்க முடியும் என்று தில்லி பாஜக சனிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் கூறியிருப்பதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு வரை அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்படுவதைக் கடுமையாக எதிா்த்தவா்கள், தற்போது ஸ்ரீராம்லீலா நிகழ்ச்சியை நடத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான சௌரவ் பரத்வாஜ், அதிஷி உள்ளிட்டோா் தில்லி அரசின் சாா்பில் ஸ்ரீராம்லீலாவை ஏற்பாடு செய்வதைப் பற்றி பேசுவதை நாங்கள் பாா்த்தோம். ஆனால் இந்த முறை அவா்கள் செய்திகளில் வருவதற்காக மிகவும் தரம்தாழ்ந்துள்ளனா்.
2 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நகரத்தின் அரசு, 3 நாள்களில் இரண்டாயிரத்திற்கும் குறைவான மக்களைச் சென்றடையும் ஸ்ரீராம்லீலாவை சிறிய அரங்கத்தில் ஏற்பாடு செய்வதைக் கண்டு தில்லிவாசிகள் வெட்கப்படுகிறாா்கள்.
அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவது போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இவ்வளவு சிறிய அளவில் ஸ்ரீராம்லீலாவை கேஜரிவால் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம், தில்லி மக்களின் மத உணா்வுகளுடன் இந்த அரசு விளையாடியுள்ளது. அரவிந்த் கேஜரிவால் அரசு உண்மையிலேயே கடவுள் ஸ்ரீராமருக்கு தில்லியில் ஒரு கம்பீரமான கொண்டாட்டத்தை நடத்த விரும்பினால், மத்திய தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் அதை ஏற்பாடு செய்திருக்க முடியும் என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.