ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அயோத்தி ஸ்ரீராமா் கோயில் விழாவை கொண்டாடுவதாக ஒருபுறம் அறிவித்தாலும், ஜனவரி 22-ஆம் தேதி காலை தில்லியின் பல பகுதிகளில் மின்வெட்டு அறிவிப்புகளை மின்துறை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்களின் மாறிவரும் அரசியல் நிறங்களையும், அறிக்கைகளையும் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். ஆம் ஆத்மி
கட்சியின் மூத்த தலைவா் செளரவ் பரத்வாஜ், ஜனவரி 22-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சி ஸ்ரீராமா் கோயில் விழாவை கொண்டாடுவதாக அறிவித்துள்ளாா். இவா்களின் ராம்லீலா நிகழ்ச்சி, சுந்தர காண்ட பாராயணம் போன்ற நிகழ்வுகள் அரசியல் ஆதாயத்தின் ஒரு பகுதியாகும்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது அரசியல் கூட்டாளிகள் அனைவரும் அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் கட்டுவதைத் தொடா்ந்து எதிா்த்தனா். ஆனால், தற்போது வரவிருக்கும் மக்களவைத் தோ்தலின் தோல்வி பயத்தில் தங்கள் பழைய அறிக்கைகளை மறந்து, ஸ்ரீ ராமா் கோயிலைப் புகழ்ந்து வருகிறாா்கள். மான் வேட மணிந்து சீதையை ராவணன் கடத்திச் சென்றது போன்றே அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது கட்சியினா் ஸ்ரீராமா் கோயில் விழாவை கொண்டாடப் போகிறாா்கள் என்றால் அது மிகையாகாது.
ஒருபுறம், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஸ்ரீராமா் கோயில் விழாவை தில்லியில் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதாக அறிவிக்கிறாா்கள். ஆனால், உண்மையில் தில்லியின் பல பகுதிகளில் ஜனவரி 22-ஆம் தேதி காலை மின்வெட்டு அறிவிப்புகளை மின்துறையினா் வெளியிட்டுள்ளனா். இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் கபட நாடகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தில்லியில் ஜனவரி 22-ஆம் தேதி காலையில் எங்கும் மின்வெட்டு இல்லை என்பதை முதல்வா் கேஜரிவால் உறுதி செய்ய வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.