அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் உரிய நேரத்தில் பணியை முடிக்கும் நோக்கில்தான் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தற்காலிக தேர்தல் நாளாகக் கொடுக்கப்பட்டது என்று தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி மூலம் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு கடந்த 19-ஆம் தேதி அனுப்பட்ட கடிதத்தில், வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் தற்காலிக தேர்தல் நாளாகக் குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 16-ஆம் தேதிதான் தேர்தல் நாளா என்று சில ஊடகக் கேள்விகள் வருகின்றன.
இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் தொடர்பான பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முடிக்க வேண்டியது அவசியம். மேலும், அந்த நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் ஒரு கற்பனையான வாக்கெடுப்புத் தேதியைக் குறிப்பிடுவதன் மூலம் தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி வழங்கப்படுகிறது.
அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிலையில் பெரும்பாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், உரிய நேரத்தில் பணிகளைத் தொடங்கி, முடிப்பதை உறுதி செய்வதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியால் கடந்த 19-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில், 16.04.2024 தேதியை ஒரு தற்காலிக தேர்தல் தேதியாகக் குறிப்பிட்டது, முன்கூட்டியே திட்டமிடல், தயாரிப்புகள் மற்றும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முடிப்பதற்காகவே. எனவே, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் உண்மையான தேர்தல் அட்டவணைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.