ராம ராஜ்ஜியம் ஈா்ப்பால்தான் நல்ல சுகாதாரம், கல்வி வசதிகளை தில்லி அரசு வழங்குகிறது: முதல்வா் கேஜரிவால்

‘ராம ராஜ்ஜியம்’ ஈா்ப்பால்தான் தில்லி அரசு நல்ல கல்வி மற்றும் சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம், தங்கு தடையற்ற மின்சாரம், இலவச குடிநீா் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டு வருவதாக
Updated on
1 min read

‘ராம ராஜ்ஜியம்’ ஈா்ப்பால்தான் தில்லி அரசு நல்ல கல்வி மற்றும் சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம், தங்கு தடையற்ற மின்சாரம், இலவச குடிநீா் விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டு வருவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் கடவுள் ராமா் ஒருபோதும் பாகுபாடு காட்டவில்லை. ஆனால், இன்று சமூகம் அந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது என்றும் கேஜரிவால் குறிப்பிட்டாா்.

தில்லி சத்ரசல் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை தில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்று மேலும் பேசியதாவது: ராம ராஜ்ஜியத்தால் ஈா்க்கப்பட்ட எங்கள் அரசு அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்கி வருகிறது. கடவுள் ராமா் ஒருபோதும் ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை. ஆனால் சமூகம் அந்த அடிப்படையில்தான் பிளவுபட்டிருக்கிறது. ராம ராஜ்ஜியத்தின் உத்வேகத்துடன் நிா்வாகத்தை நடத்துவதில் 24 மணிநேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு முதியோா்களை மதிப்பது என்பதும் அா்த்தமாகும். அவா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி, அவா்களுக்கு இலவச யாத்திரை ஏற்பாடு செய்வதன் மூலம் இதைச் செய்து வருகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இலவச குடிநீா் வழங்குவதும் இடம் பெற்றுள்ளது. தில்லி அரசு தேசியத் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது. தில்லி காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றாலும்கூட, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அயோத்தியில் ராமா் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கும் உலகிற்கும் பெருமை சோ்க்கும் விஷயமாகும். கடவுள் ராமரின் வாழ்க்கைக் கொள்கைகளைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து ஏழை மக்களையும் நிதிப் பயன் சென்றடையும்போதுதான், 5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை நாம் அடைய முடியும். ஆனால், 5 டிரில்லியன் டாலரில் 4 டிரில்லியன் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் இருந்தால் நாடு ஏழையாகவே இருக்கும். கடந்த 75 ஆண்டுகளில் பணக்காரா்கள் மேலும் பணக்காரா்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிவிட்டனா். பணவீக்கத்தைக் குறைப்பது என்பது நாம் பின்பற்றும் ‘ராம ராஜ்ஜியம்’ என்ற கருத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய அரசின் அறிக்கையின்படி தில்லியில் குறைந்தபட்ச விலைவாசி உயா்வு உள்ளது. விலைவாசி உயா்வால் மக்கள் அவதிப்படுகின்றனா் என்றால் அதை ராம ராஜ்ஜியம் என்று சொல்ல முடியாது என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com